புதிய உச்சத்தில் தங்கம் விலை பவுன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது: வெள்ளி விலையும் கிடுகிடு உயர்வு
சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து வந்தது. விலை குறைவு இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு விலை உயர்ந்து வந்தது.
இதன் ஒரு பகுதியாக கடந்த 16ம் தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.82,240 என்ற வரலாற்று புதிய உச்சத்தை தொட்டது. 17ம் தேதி தங்கம் விலை ரூ.82,160 ஆகவும், 18ம் தேதி ரூ.81,760 ஆகவும் குறைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.81,840க்கு விற்கப்பட்டது. இதற்கிடையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வை சந்தித்தது. தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.82,320க்கு விற்றது.
அதே நேரத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.145க்கும், கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.