மீண்டும் உச்சம் நோக்கி தங்கம் விலை: கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: மீண்டும் தங்கம் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா மற்றும் இந்தியா மீதான வரி உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள போர் பதற்றம் உள்ளிட்டவையால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கு பல நாடுகள் வந்துவிட்டன. இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகளவில் செய்யும் முதலீடே தங்கத்தில் தான். ஏதாவது அவசர தேவையென்றால் உடனடியாக பணம் புரட்டுவதற்கு தங்கம் மட்டுமே கைகொடுத்து வருகிறது.
இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவது சாமானிய மக்களை பாதிக்க தொடங்கி இருக்கிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ம்தேதி ஒரு பவுன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ம்தேதி ஒரு பவுன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை சற்று சரிவு ஏற்பட்டிருந்தாலும், கடந்த வாரத்தில் மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது.
நவம்பர் 5ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.89,440க்கு விற்பனையாகியது. இதன்பின் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை பவுன் ரூ.720 உயா்ந்து ரூ.96,560-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.96,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், புதன்கிழமையான நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,060-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96.480-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வது சமானியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.