இந்தியாவின் புவிசார் குறியீடு
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு(GI), அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ நன்மதிப்பையோ பறைசாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளைக் குறிப்பிட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கமுடியும். உலக வணிக அமைப்பின் உறுப்புநாடான இந்தியாவில், புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003-ல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவுக்கும் பாதுகாப்புக்கும் இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவிலும் பிரபலமாகத் திகழ்கின்றன. 195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் 57 பொருட்கள் விவசாயம், உணவு சார்ந்தவை ஆகும்.
புவிசார் குறியீடு பெற்ற தமிழகப் பொருட்கள்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடிச்சேலை, சேலம் மாம்பழம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய், புளியங்குடி எலுமிச்சைப் பழம், பண்ருட்டி பலா உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.