தொடர் விடுமுறையை முன்னிட்டு இயக்கப்படும் 3,190 சிறப்பு பஸ்களின் முழு விவரம்!
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; 26/09/20025 (வெள்ளிக்கிழமை) 27/09/2025 (சனிக்கிழமை) 28/09/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 29/09/2025, மற்றும் 30/09/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருத்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று (26-09-2025) 790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோன்று, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (27-09-2025) 565 பஸ்களும், திங்கட்கிழமை (29-09-2025) 190 பஸ்களும், செவ்வாய்க்கிழமை (30-09-2025) 885 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்றும் (26-09-2025), நாளையும் (27-09-2025) 215 பஸ்களையும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பஸ்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதே போன்று, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக, அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 22,735 பயணிகளும் சனிக்கிழமை அன்று 14.415 பயணிகளும் ஞாயிற்றுக்கிழமை அன்று 11.900 பயணிகளும் திங்கட்கிழமை அன்று 8,070 பயணிகளும் மற்றும் செவ்வாய் அன்று 93,138 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலை பயணம் மேற்கொள் இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.irstch மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பஸ் இயக்கத்தினை அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.