நட்பின் காரணமாகவே பங்கேற்றேன் மூப்பனார் நினைவிடத்திற்கு வந்ததில் அரசியல் இல்லை: எல்.கே.சுதீஷ் பேட்டி
சென்னை: ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேமுதிக சார்பில் அவர் சென்றிருந்ததால் பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் அளித்த பேட்டி: ஜி.கே.மூப்பனார் 24வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம். விஜயகாந்துக்கும். ஜி.கே.மூப்பனாருக்கும் இடையே 40 ஆண்டுகால நட்பு உண்டு. விஜயகாந்த் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். தே.ஜே. கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளீர்களே என்று கேட்கிறீர்கள். நாங்கள் இங்கு வந்தது ஜி.கே.வாசன், ஜி.கே.மூப்பனார் குடும்பத்தினருக்காகவே. இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும், 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். கூட்டணி ஆட்சி என்பதை தேமுதிக வரவேற்கிறது. யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி 9ம்தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.