பிரான்ஸ் மியூசியத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மதிப்பு ரூ.900 கோடி: 3 நாட்களுக்கு பிறகு திறப்பு
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த 19ம் தேதி பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 9.30 மணிக்கு அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் வெறும் 4 நிமிடத்தில் கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து பிரான்ஸ் அரச குடும்பத்து நகைகளை திருடிச் சென்றனர்.
அரச கிரீடம் உட்பட சில நகைகள் அருங்காட்சியகத்தின் அருகே மீட்கப்பட்ட நிலையில், பிற பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், திருட்டு சம்பவத்திற்கு பின் அருங்காட்சியகம் மூடப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டது.
பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டாலும், திருட்டு நடந்த அப்போலோ காட்சி கூடம் மட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொள்ளை போன நகைகள் மதிப்பு ரூ.900 கோடி என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பாரம்பரியத்தை ஒப்பிடுகையில் அவை விலைமதிப்பில்லாதவை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொள்ளையர்களை பிடிக்க சுமார் 100 போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.