ரூ.42.30 லட்சம் மோசடி: அதிகாரி அதிரடி கைது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவரது மனைவி ரேவதி மற்றும் 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக சேலம் மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(42), ஓமலூர் செந்தில்நாதன்(40) ஆகியோர் கூறியுள்ளனர். இதை நம்பி 4 பேரும் ரூ.42 லட்சத்து 30 ஆயிரம் தொகையை பல்வேறு தவணைகளில் கடந்த ஜனவரி மாதம் அனுப்பியுள்ளார்.
அதன் பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் இசிஜி டெக்னீசியன், கலால் அலுவலக ஊழியர், ரேஷன் கடை ஊழியர், வேலை வாய்ப்பு அலுவலக உதவியாளர் என பணி நியமன ஆணைகளை இ-மெயிலில் அனுப்பியுள்ளனர். ஆனால், அது போலி என தெரிய வந்தது.
இதுகுறித்து சீனிவாசன் புகாரின்படி பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தியதில், சந்தோஷ்குமார் சேலம் போலீசாரால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது. சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த செந்தில்நாதனை போலீசார் நேற்று கைது செய்தனர்.