அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நிதியை தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அந்த ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்து சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியான பேராசிரியர் மைத்ரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த பயணத்திற்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்கே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் அரசு நிகழ்ச்சியை முடித்த பின்னர் ரணில் அங்கிருந்து இங்கிலாந்து திரும்பியுள்ளார். தனது மனைவியின் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு செலவில் இங்கிலாந்து சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அவரது ஊழியர்களிடம் பயணச்செலவு குறித்து ஏற்கனவே சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ரணில் குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்துக்கு வரும்படி சம்மன் விடுக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று அங்கு வந்த முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் ரணிலின் பதில் திருப்தியளிக்காத நிலையில் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் கொழும்புவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல்வாதியான இவர் இலங்கையின் பிரதமராக 6 முறை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.