கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை 4 மடங்கு உயர்வு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்படி, இன்று ஒரு கிலோ மல்லி 600 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்துக்கும் ஐஸ் மல்லி 500ல் இருந்து 2,500க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 400 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கனகாம்பரம் 500 இருந்து 1000க்கும் சாமந்தி 80ல் இருந்து 140 க்கும் சம்பங்கி 50 இருந்து 140 க்கும் அரளி பூ 200 இருந்து 300க்கும் பன்னீர் ரோஸ் 60 ல் இருந்து 140 க்கும் சாக்லேட் ரோஸ் 100ல் இருந்து 160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூமார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’பனிப்பொழிவு, வரத்து குறைவால் இன்று காலை மிகவும் குறைவான பூக்கள் வந்துள்ளது. இதனால் மல்லி, ஐஸ் மல்லி, முல்லை, ஜாதிமல்லி ஆகிய பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு அதிகரித்தால் கண்டிப்பாக பூக்களின் வரத்து குறைந்து மீண்டும் பூக்களின் விலை உயரும்’ என்றார்