தமிழகத்தில் கனமழை எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
அண்ணாநகர்: தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 400க்கும் ஐஸ் மல்லி 600ல் இருந்து 300க்கும் ஜாதிமல்லி, முல்லை 400 ரூபாயில் இருந்து 300க்கும் கனகாம்பரம் 300 ல் இருந்து 200க்கும் சாமந்தி 140ல் இருந்து 100க்கும் சம்பங்கி 80 இருந்து 20க்கும் பன்னீர் ரோஸ் 140 ரூபாயில் இருந்து 60க்கும் சாக்லேட் ரோஸ் 100ல் இருந்து 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ நேற்றிரவு முதல் காலை வரை கனமழை பெய்து வருவதால் வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்து வியாபாரம் இல்லாமல் பூக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்’ என்றார்.