ஒகேனக்கல் காவிரியில் 32,000 கனஅடி நீர்வரத்து: அருவிகளில் வெள்ளம்
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து 32,000 கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் 7வது நாளாக முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு, இருமாநில எல்லையில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரிக்கு, நேற்று காலை வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 43,000 கனஅடியாகவும், இன்று காலை 32,000 கனஅடியாகவும் குறைந்தது. அங்குள்ள அருவிகள் மற்றும் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்க 5வது நாளாக தடை தொடர்கிறது.
அதேபோல், மேட்டூர் அணைக்கு, நேற்று காலை 65,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 35,500 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக, வினாடிக்கு 22,300 கனஅடி, உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 12,700 கனஅடி, மேல்மட்ட மதகுகள் வழியாக கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 7வது நாளாக முழு கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.