விமானத்தில் அசைவ உணவு சாப்பிட்ட முதியவர் மூச்சு திணறி பரிதாப சாவு: இழப்பீடு கோரி மகன் புகார்
கொழும்பு: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான டாக்டர் அசோக ஜெயவீரா (83). இவர், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு விமானத்தில் பயணித்துள்ளார். இந்த பயணத்தில் சைவ உணவு வேண்டும் என ஜெயவீரா முன்பதிவு செய்திருந்தார். ஆனால், சைவ உணவு இல்லை என கூறி அசைவ உணவை விமான பணிப்பெண் வழங்கியுள்ளார். அதை சாப்பிட முயன்றபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.
உடனே விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் தரையிறங்கியது. உடனடியாக ஜெயவீரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். பரிசோதனையில், உணவு அல்லது திரவம் நுரையீரலுக்குள் போனதாகவும் இதனால் ஏற்பட்ட ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ என்ற நுரையீரல் தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்தார்.
அதாவது சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை விமான குழு கொடுத்த நிலையில், அது தவறுதலாக நுரையீரலுக்கு சென்று அதனால் ஏற்பட்ட ஆஸ்பிரேஷன் நிமோனியா காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி நடந்துள்ளது. இது தொடர்பாக அவரது மகன் சூர்யா ஜெயவீரா, கத்தார் ஏர்வேஸ் மீது கவனக்குறைவான சேவை மற்றும் மருத்துவ உதவி வழங்க தவறியதாக குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் காரணமாகத்தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாக $128,821 வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச விமான பயணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விதிகள் மாண்ட்ரீல் மாநாட்டில் விதிக்கப்பட்டிருந்தது. மாண்ட்ரீல் மாநாட்டின் உறுப்பினர்களாக கத்தரும் அமெரிக்காவும் இருப்பதால், அதன் விதிகள் கத்தார் ஏர்வேஸுக்கும் பொருந்தும் என சுட்டிக்காட்டியே அவர் இழப்பீடு கோரிக்கை விடுத்துள்ளார்.