ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ ரூ.பல லட்சம் எரிந்து சாம்பல்
மதுரை: மதுரையில் ஏடிஎம் மையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலானது. இதன் அருகே நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களும் எரிந்து சேதம் அடைந்தன.
மதுரை கீரைத்துறை அருகே, புதுமாகாளிப்பட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது.
இன்று காலை மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து திடீரென புகை குபுகுபுவென வெளியானது. சிறிது நேரத்தில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் அறை முழுவதும் தீப்பிடித்து மளமளவென பரவியது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேர போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் ஏடிஎம் இயந்திரம், அதிலிருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஏடிஎம் மைய அறை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அருகே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் எரிந்து நாசமாகின.
ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஏடிஎம் மையம் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி மதுரை தெற்குவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.