தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், துணை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரை!
சென்னை: பேரவைத் தலைவர் அவர்களே, துணை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கக்கூடிய நல்வாய்ப்பினை வழங்கியிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், சட்டமன்றப் பேரவையின் தலைவரான பேரவைத் தலைவர் அவர்களுக்கும், அவை முன்னவர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர், முன் வரிசை தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி மற்றும் முன்வரிசையில் இருக்கக்கூடிய தோழமைக் கட்சியினுடைய தலைவர்கள், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் தங்களுடைய அரிய கருத்துகளை இங்கே சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றியினை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நேற்றைய விவாதத்தினூடகவே, நான் தேவைப்படக்கூடிய இடங்களில் பல்வேறு விளக்கங்களைத் தந்திருக்கிறேன். எனவே, என்னுடைய பதிலுரையில், அவற்றுக்கான அந்த விளக்கங்களைத் தவிர்த்து, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய தமிழ்நாட்டினுடைய சூழ்நிலை, நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள், ஒன்றிய அரசு எந்த அளவிலே நம்மை வஞ்சித்து வருகிறது என்பதையெல்லாம் நான் உங்களிடத்தில் எடுத்துச் சொல்வது, நிதியமைச்சரான என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, அதற்கு முன்பாக, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, விவாதங்களை முடித்து, அதற்குப் பிறகு இருக்கக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் மிக, மிக குறிப்பிடத்தக்க ஒரு செய்தி, தமிழ்நாட்டிற்கு ஓர் இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது. ஏறத்தாழ 14 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதம் என்கிற இரட்டை இலக்கத்தை நாம் எய்தியிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும், நாம் திட்டமிட்டதைக் காட்டிலும், 2.2 சதவிகிதம் அதிகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) இந்த மகத்தான சாதனை நம்முடைய முதலமைச்சர் எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பல்வேறு பணிகள், அவருடைய ஓயாத உழைப்பு, அவருடைய முயற்சிகளின் காரணமாக விளைந்த ஒன்று என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். அதை நான் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவருடைய ஓயாத உழைப்பும், அவருடைய திட்டமிட்டப் பணிகளும்தான் அருஞ்சாதனைகளுக்கு அடிகோலிட்டிருக்கிறது. கடைசியாக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த 2010-2011 ஆம் ஆண்டில் இந்த இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாம், அதற்குப் பிறகு நம்முடைய முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பீடுநடை போடக்கூடிய திராவிட மாடல் ஆட்சியில்தான் இரட்டை இலக்கை நாம் பெற்றிருக்கிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) அதன் வாயிலாக 2030-ல் One Trillion American Dollar பொருளாதாரத்தை நாம் நிச்சயமாக எட்டுவதற்கு, இது ஓர் அடிப்படை மைல் கல்லாக அமைந்திருக்கிறது என்பதை நான் இந்த மன்றத்திலே பெருமையோடு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, நான் தொடக்கத்தில் குறிப்பிட்டுச் சொன்னதை போல, ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில், ஒரு நாட்டினுடைய அடிப்படை கட்டமைப்புகளில் சில முக்கியமான அங்கங்கள் இருக்கின்றன. அதன்மூலமாக பெறக்கூடிய வளர்ச்சிதான், மாநிலமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும், அந்த நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான குறியீடுகளாக அமைகின்றது. அந்த வகையில் ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியை நீங்கள் பார்ப்பேன் என்று சொன்னால், எங்கே நாம் அதிகமான வளர்ச்சி நிலையை எய்த வேண்டும் என்றால், அடிப்படையிலே நாம் அனைவரும் அறிவோம். கல்வியிலே வளர்ச்சியினைப் பெற வேண்டும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், குடிப்பதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய குடிநீர். அதேபோன்று, நமக்கு கிடைக்கக்கூடிய நிதிப் பகிர்வின் மூலமாக எதிர்கால திட்டங்களை உருவாக்கக்கூடிய ஒரு நிலைமை. நம்முடைய எதிர்கால சந்ததியினரை எந்த அளவிற்கு நாம் கொண்டு செல்கிறோம். ஆக, இவையெல்லாம் உள்ளடக்கியிருக்கக்கூடிய, ஓர் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியாக இருந்தாலும், ஒரு நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியாக இருந்தாலும், அந்த வளர்ச்சிதான் ஒரு நாட்டிற்கு நிலையானதொரு வளர்ச்சியாக sustainable development ஆக அமையும் என்பதை நாம் நன்றாக அறிவோம். ஆனால், ஒன்றிய அரசு இந்தக் குறியீடுகளில் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், எந்தளவிற்கு தொடர்ந்து நம்மை வஞ்சிக்கிறது என்பதை நான் இந்த மன்றத்திலே சொல்வது பொருத்தமாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உதாரணத்திற்கு, கல்வியை எடுத்துக்கொண்டால், கல்விக்கான நிதியைப் போராடி பெறுவது எந்த வகையிலே இருக்கிறது என்பதை இந்த மாமன்றத்திலே நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள்.
அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டிலே கல்வி கட்டமைப்பு எந்த வகையிலே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரக்கூடிய பல்வேறு ஆட்சி முறைகளாக இருந்தாலும், கல்விக்கென ஓர் உறுதியான கட்டமைப்பை உருவாக்கியிருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். ஆனால், ஒன்றிய அரசு ஏனோ நமக்கே உரித்தாக இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்காக வழங்கக்கூடிய நிதியினை தொடர்ச்சியாக வழங்குவதற்கு மறுத்து வருகிறது. நான் இந்தப் பேரவைக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நாம் கல்வியிலே கொண்டு வந்திருக்கிற முற்போக்கு கொள்கையின் விளைவாக அகில இந்திய அளவிலே பள்ளிக் கல்வியை நாம் ஒரு சிறந்த அமைப்பாக தமிழ்நாட்டிலே உருவாக்கியிருக்கிறோம். இருந்தாலும், ஒன்றிய அரசு ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை தர மறுத்து, கல்வி உரிமைச் சட்டம், RTE என்று சொல்லக்கூடிய கல்வி உரிமைச் சட்டத்தின்பால், நமக்கு வழங்கக்கூடிய 450 கோடி ரூபாய் நிதியை மட்டுமே தற்போது விடுவித்திருக்கிறார்கள். விடுவிக்க வேண்டிய பணம் எவ்வளவு? 4 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், கொடுத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு? வெறும் 450 கோடி ரூபாய். இந்த நிதியைக்கூட பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கியிருக்கிறார்கள்.
இந்த 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எதற்காக வருகிறது? பிள்ளைகளுடைய கல்விக்காக வருகிறது, ஆசிரியர்களுடைய சம்பளத்திற்காக வருகிறது. பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக வர வேண்டியது. ஆனால், அனைத்தையும் தெரிந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்றிய அரசு, திட்டமிட்டே இந்த நிதியை விடுவிக்காததன் காரணமாக, இந்த வளர்ச்சிப் பணிகள் இன்றைக்கு முடங்கி போய் இருக்கிறது. இருந்தாலுங்கூட, நீங்கள் என்னதான் இந்த நிதியை முடக்கி வைத்திருந்தாலும்கூட, நாட்டுமக்களுக்கு கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் நாங்கள் நிறைவேற்றுவோம் என்கின்ற தூய எண்ணமுடைய நம்முடைய முதலமைச்சர் , எந்தக் குழந்தையினுடைய படிப்பையும், நிதியாதாரங்கள் இல்லையென்ற காரணத்தால் நாங்கள் நிறுத்தி விட மாட்டோம் என்கின்ற அந்த உயரிய நோக்கோடு (மேசையைத் தட்டும் ஒலி) அப்படி எந்தக் குழந்தையும் பாதிப்படைய நான் விட்டுவிட மாட்டேன் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு, நம்முடைய மாநிலத்தினுடைய சொந்த நிதியாதாரங்களைக் கொண்டு, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் அந்த நிதியை விடுவிக்காவிட்டாலும், ஆசிரியர்களுக்கான சம்பளமாக இருந்தாலும், மாணவர்களுக்கான கல்வி நிதிகளாக இருந்தாலும், உட்கட்டமைப்பு வசதிகளாக இருந்தாலும், நாங்கள் மாநில நிதியிலிருந்து அவற்றிற்கு நிதியினை விடுவித்துத் தருகிறோம் என்று விடுவிக்கிறார்கள்.
அதற்குக் காரணம் என்னவென்று சொன்னால், கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களம் அல்ல; அது அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கக்கூடிய தார்மீகமான ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்திருக்கக்கூடிய காரணத்தால்தான், முதலமைச்சர் தாயுள்ளத்தோடு, இன்றைக்கு மாநிலத்தினுடைய சொந்த நிதியிலிருந்து அதற்கான நிதிகளை விடுவித்திருக்கிறார்கள். இன்னும்கூட சொல்வேன்; இப்படி ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து நாங்கள் கேட்பது என்பது உங்களிடத்திலிருந்து நாங்கள் பெறக்கூடிய உதவிகளாக நீங்கள் எண்ணிப்பார்க்காதீர்கள். அதிலும் ஏதோ எங்கள்மீது இரக்கப்பட்டு, நீங்கள் தரக்கூடிய உதவிகளாக எண்ணிவிடாதீர்கள். இது எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் எழுப்பக்கூடிய குரல் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள் என்று நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த உரிமைப் போராட்டத்தில் எங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அடுத்து, நான் ஒன்றைக் குறிப்பிட்டேன். படிக்கக்கூடிய கல்விக்கான நிதி மட்டுமல்ல, குடிக்கக்கூடிய தண்ணீருக்கான நிதியையும்கூட நீங்கள் தர மறுக்கிறீர்கள். கிராமங்களிலேயும், நகர்ப்புறங்களிலேயும் இருக்கக்கூடிய தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கக்கூடிய திட்டமாக இன்றைக்கு நாம் கருதி செயல்படக்கூடிய திட்டம் ஜல்ஜீவன் திட்டம்.
அந்தத் திட்டத்திற்கான நிதி, ஒன்றிய அரசாங்கத்திலிருந்து வர வேண்டிய நிதி, தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு குடிநீர்த்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக்கொண்டு வந்தாலுங்கூட, இந்த ஜல்ஜீவன் திட்டத்திலே ஒன்றிய அரசினுடைய பங்காக நீங்கள் அளிக்க வேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா? 3407 கோடி ரூபாய். அதை நீங்கள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டியிருந்தும், இதுகாறும் அந்த நிதி நமக்கு வழங்கப்படாமல் ஒன்றிய அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால், ஒன்றிய அரசு கொடுக்கக்கூடிய அந்தப் பங்குத் தொகையுடன் சேர்த்து, தமிழ்நாடு அரசினுடைய பங்கையும் சேர்த்து, இந்த இரண்டுக்குமாக சேர்த்து, தற்காலிகமாக மாநில அரசே இந்த இரண்டுக்குமான அந்த நிதியை நம்முடைய பொறுப்பிலிருந்து நாம் விடுவித்துக்கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் எண்ணிப் பாருங்கள். தமிழ்நாடு அரசினுடைய பங்கையும் தருகிறோம்; உங்களுடைய சுமையையும் நாங்கள் சேர்த்து சுமக்கின்றபோது, இது மிகப்பெரிய ஒரு நிதி அழுத்தத்தை நம்முடைய நிதி நிர்வாகத்தின்மீது கொண்டுவந்திருக்கிறது என்பதை நான் இந்த அவைக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.
எனவே, ஒன்றிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுடைய திட்டங்களுக்குக்கூட இந்த நிதிகளை ஒதுக்காமல் இருப்பது என்பது என்னைப் பொறுத்தமட்டில், மன்னிக்கவும், நான் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால், இது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை நான் இந்த மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே, நான் கேட்டுக்கொள்வது, அனைவருக்கும் சமவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் சமவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில், ஒன்றிய அரசு உடனடியாக இந்த நிதிகளை விடுவிக்க வேண்டும். அந்த வாய்ப்பினை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவதைப்போல தமிழ்நாட்டிற்கும் அரசியல் காரணங்களைத் தாண்டி நீங்கள் வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்வேன். அதைப்போல, உட்கட்டமைப்பு நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் என்றால், நெடுஞ்சாலைகள் அதில் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கின்றன. தமிழ்நாட்டில் நீங்கள் பார்ப்பீர்களென்றால், பல்வேறு இடங்களில் இன்றைக்கு தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக செல்லக்கூடிய four lane traffic என்று சொல்லக்கூடிய நான்கு வழிச்சாலைகள், சென்னையிலிருந்து இன்றைக்கு கன்னியாகுமரிக்கு போகிறோம். அதைப்போல, சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு போகிறோம்.
சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்கிறோம் என்று சொன்னால், இன்றைக்கு சாலை கட்டமைப்புகள் மிகப் பெரிய அளவிலே வந்திருக்கக்கூடிய காரணத்தால், நம்முடைய தொழில் வளர்ச்சி மிகப்பெரிய அளவிலே உருவாகியிருக்கிறது. 2024-2025 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசினால் 8 புதிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்கள் மொத்தம் ரூ.50,655 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டன. அதில், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டும் 3 வழித்தடங்களைப் பெற்றிருக்கிறது. 8 வழித்தடங்களில் 3 வழித்தடங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு என்று, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.11,846 கோடி. குஜராத் மாநிலத்திற்கு ஒரு வழித்தடம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,534 கோடி. மகாராஷ்டிராவிற்கு ஒரு வழித்தடம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.17,827 கோடி என மொத்தமாக நீங்கள் கூட்டிப்பார்த்தால், நான் குறிப்பிட்டதைப் போல அந்த மாநிலங்களுக்கெல்லாம் ரூ.30,207 கோடி. இங்கு நான் குறிப்பிட்டிருக்கின்ற மொத்தம் ரூ.50,655 கோடி ஒதுக்கீட்டில், இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.30,207 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பேரவைத் தலைவர்: 38 ஆயிரம், 38 ஆயிரத்து.
தங்கம் தென்னரசு: கொடுக்கக்கூடிய தொகை. ஆனால், தமிழ்நாட்டிற்கு ஒன்றுகூட இல்லை. (குறுக்கீடு) அவர் என்னதான் சபாநாயகராக இருந்தாலும், வாத்தியார் இல்லையா! பேரவைத் தலைவர்: நீங்கள் 10 ஆயிரம் கோடி, 11 ஆயிரம் கோடி, 17 ஆயிரம் கோடி என்று சொன்னீர்கள். அதனால்தான் 38 ஆயிரம் கோடி என்று சொன்னேன். தங்கம் தென்னரசு: நான் சொன்னதுதான். (குறுக்கீடு) இதிலிருந்து நீங்கள் என்ன கவனத்தில் கொள்ளவேண்டும் என்றால், சபாநாயகர் என்பவர் மிகுந்த நடுநிலை பொறுப்போடு, (மேசையைத் தட்டும் ஒலி) அமைச்சரே விட்டுவிட்டாலும்கூட அமைச்சரையும் திருத்தக்கூடிய பொறுப்பினை அவர் ஏற்கிறார். நீங்கள் அவ்வப்போது சொல்கிறீர்கள்-- (குறுக்கீடுகள்) இல்லை, அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால், நான் ஒன்றை விட்டுவிட்டாலும், எனக்கென்று எடுத்துக்கொடுக்கக்கூடிய ஒரு ஆசிரியராகத்தான் சபாநாயகர் இப்போதும் இருக்கிறார். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னால், நிதி ஒதுக்கம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த 8 புதிய அதிவேக சாலைகளில் ஒரு சாலைகூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்பதுதான் நீங்கள் இங்கே குறித்துக்கொள்ள வேண்டிய, கவனமாக கேட்கவேண்டிய ஒன்று. 8 புதிய சாலைகள் இருக்கின்றன.
அந்த 8-ல் ஒன்றை தெற்கிற்கு கொடுத்தால் என்ன? (குறுக்கீடு) இதைப் பாருங்கள், Already developed என்று சொன்னால், எத்தனை இடங்கள் இன்றைக்கு, நாம் செய்ய வேண்டிய இடங்கள் இருக்கின்றன. நாம் மனசாட்சியோடு எண்ணிப்பார்ப்போம் என்று சொன்னால், நான் அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் எப்படி பா.ஜ.க.-வுடன் அ.தி.மு.க. எந்த அளவிற்கு ஐக்கியம் ஆகிவிட்டீர்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். (சிரிப்பு) காரணம் அவர் அதைத்தான் சொல்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) என்ன காரணம். நிதிப் பகிர்வு என்று வருகிறபோது, Finance Commission சார்பாக வந்தவர்கள் நீங்கள் எல்லாம் developed States என்று சொன்னார்கள். Developed States என்று சொல்லக்கூடிய அந்த காரணத்தினால்தான் தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பை--உங்களுக்கும் சேர்த்து சொல்வேன். நீண்ட பல காலமாக நாம் உருவாக்கியிருக்கக்கூடிய இந்த உட்கட்டமைப்பு, நாம் உருவாக்கியிருக்கக்கூடிய கல்வி கட்டமைப்பு, மருத்துவ கட்டமைப்பு, நாம் உருவாக்கி இருக்கக்கூடிய சமூக பொருளாதார காரணிகளுடைய வளர்ச்சி, ஆக இவற்றையெல்லாம் எண்ணி நாம் பெருமைப்படக்கூடிய அதேநேரத்தில், இவற்றையெல்லாம் குறித்து உங்களுடைய வார்த்தையில் சொல்லவேண்டுமென்று சொன்னால், நீங்கள் developed state என்கிற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு, penalise செய்யப்படுகிறது என்பதை நீங்களே ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
(மேசையைத் தட்டும் ஒலி) வளர்ச்சிக்கு வருகிறோம். வளரக்கூடிய பிள்ளைகளுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதற்காக ஊட்டச்சத்தை நிறுத்துவேன் என்பது எந்தவகையில் நியாயம். எனவே, நான் திருப்பி வருவேன் என்று சொன்னால், (மேசையைத் தட்டும் ஒலி) 8-ல் ஒரு சாலைகூட நீங்கள் தமிழ்நாட்டிற்கு தரவில்லை என்பதை நான் சொல்வேன். அதேபோல NHAI தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மொத்த செலவினமாக செய்திருப்பது--ரூ.27,986 கோடி தமிழ்நாட்டிற்கு NHAI-லிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு NHAI எவ்வளவு கொடுத்திருக்கிறது என்றால், ரூ.81,803 கோடி. தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு அதிகம். நான் இந்த வித்தியாசங்களை, ஏதோ நிதி ஒதுக்கீட்டிற்காக வரக்கூடிய வித்தியாசங்களாக, குறைபாடுகளாக சொல்லவில்லை. இது இரண்டு மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு அப்பட்டமான அரசியல் பாகுபாடு என்று நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. அதன் காரணமாக இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பாக இருக்க வேண்டுமென்று சொன்னால், இந்திய நாட்டிலே இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களும் சமமாக பார்க்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய அந்த நியாயமான பங்கும், வளர்ச்சிக்கான உரிமையும் திட்டமிட்டவாறு மறுக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது என்பதுதான் என்னுடைய வாதமாகும்.
அதேபோல, இரயில்வே திட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நெடுஞ்சாலை மட்டுமல்ல முதல்வர் அவர்களும், தமிழ்நாடு அரசும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதிகளை தாருங்கள், புதிய இரயில்வே திட்டங்களைத் தாருங்கள் என்று நேரம் வாய்க்கிறபோதெல்லாம், சந்தர்ப்பம் வாய்க்கிறபோதேல்லாம், நம்முடைய முதலமைச்சர் , பாரத பிரதமர் அவர்களிடத்திலேகூட பல்வேறு சமயங்களிலே தமிழ்நாட்டின் சார்பிலே கோரிக்கை மனுக்களை அளித்து, அவரை சந்திக்கிறபோதெல்லாம் அதை வலியுறுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக கோயம்புத்தூர்-கரூர், கோயம்புத்தூர்-கோபிசெட்டிப்பாளையம், பவானி-சேலம், மதுரை-வேலூர், இனாம்குளத்தூர் போன்று இருக்கக்கூடிய முக்கியமான பாதைகளுக்கு அனுமதியினை கேட்டு நம்முடைய முதலமைச்சர் பல நேரங்களிலே வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஒன்றிற்குக்கூட ஒன்றிய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, பல மாவட்டங்களிலுள்ள பகுதிகளும் இந்த இரயில்வே இணைப்புகள் கிடைக்காமல் விலகியிருக்கக்கூடிய காரணத்தால், அந்த மாவட்டங்களுடைய வணிகம், தொழில் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இரயில்வே திட்டங்களை நீங்கள் எடுத்துக்கொண்டாலும்கூட, மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மொத்த இரயில்வே நிதி 19,068 கோடி ரூபாய். ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு 2025-2026 ஆம் நிதியாண்டில் மட்டும் 19,858 கோடி ரூபாய். அதாவது, 3 ஆண்டுகளில் நமக்கு வழங்கியது 19,068 கோடி ரூபாய்; ஆனால், இந்த 2025-2026 ஒரே நிதியாண்டில் மட்டும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 19,858 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக, மூன்றாண்டுகளில் நமக்கு வழங்கப்பட்ட தொகையானது, ஒரே ஆண்டில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டக்கூடிய பாகுபாட்டிற்கு இதுதான் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இது நிதி ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய பாகுபாடு மட்டுமல்ல; அரசியல்ரீதியாக நீங்கள் காட்டக்கூடிய பாகுபாட்டையும் இது சுட்டிக்காட்டுகிறது. அடுத்ததாக, உத்தரப் பிரதேசத்தில் 92,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 68 இரயில்வே திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 33,467 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22 இரயில்வே திட்டங்கள்தான் இருக்கின்றன. , நம்மைவிட 3 மடங்கு அதிகமான இரயில்வே திட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
நேற்றைக்குக்கூட, சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி வானதி சீனிவாசன் பேசும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நீங்கள் பெற்றதைவிட, நாங்கள் அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். 2009-2014 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும், 2014-2024 ஆம் ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும் ஒப்பிடுகிறபோது, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சராசரி வருடாந்திர ஒதுக்கீடு 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு வெறும் 6 மடங்காக மட்டுமே இருக்கிறது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, இந்தக் கூட்டாட்சி அமைப்பில் அனைத்து மாநிலங்களிலும் சமமான ஒரு வளர்ச்சி நிலையை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டுமென்று நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, நம்முடைய முதலமைச்சர் , உட்கட்டமைப்புத் திட்டங்களில் உருவாக்கியிருக்கக்கூடிய மகத்தானதொரு புரட்சி, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம். ஆதி திராவிட மக்களுக்கு முதன்முதலாக கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுத்த பெருமை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு. (மேசையைத் தட்டும் ஒலி) அவர்தான் 1970 ஆம் ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கித் தந்தார்; 2010-ல் அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இவற்றை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், நம்முடைய முதலமைச்சர் , 14 வருடங்களுக்குப் பிறகு அந்தத் திட்டத்திற்குப் புத்துயிரூட்டி மீண்டும் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்கிற அந்தத் திட்டத்தை தன்னுடைய தந்தையினுடைய கனவை நிறைவேற்றக்கூடிய தனயனாக, (மேசையைத் தட்டும் ஒலி) இன்றைக்கு நாட்டு மக்களுக்கு, சராசரியாக இருக்கக்கூடியவர்களுக்கு, சாதாரண ஏழையெளிய மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடு வழங்கக்கூடிய மகத்தான திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில், ஒரு வீடு கட்டுவதற்கு 3½ இலட்சம் ரூபாய் என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியையும்கூட நாம் ஒன்றிய அரசிடமிருந்து பெறவில்லை. முழுமையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து முதலமைச்சர் தந்திருக்கிறார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாயில் 2,00,000 வீடுகளைக் கட்டுவதற்கு நம்முடைய முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதில் ஒரு சாதனை நோக்கோடு 1 இலட்சம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்பதை நான் மிகுந்த பெருமையோடு சொல்வேன். (மேசையைத் தட்டும் ஒலி) அதில், மேலும் 74,000 வீடுகள் தற்போது கட்டுமானத்தின் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. அதேபோன்று, நகர்ப்புறங்களில் வீடுகளைக் கட்டுதல். நகர்ப்புறத்தில் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு ஏறத்தாழ 15 இலட்சம் ரூபாய் செலவாகக்கூடிய நிலை இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் என்ற நகர்ப்புறப் பகுதிகளுக்கான திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு என்பது வெறும் 1.5 இலட்சம் ரூபாய்தான். குறிப்பிட்ட வகையில் 15 இலட்சம் ரூபாயாவது செலவாகின்ற நிலையில், 1.5 இலட்சம் ரூபாயை மட்டும்தான், அதாவது 10 சதவிகித பங்கினைதான் ஒன்றிய அரசாங்கம் தருகிறது. இது மிக மிகக் குறைவான நிதி. ஆனால், மீதமிருக்கக்கூடிய நிதியை, சுமார் 90 சதவிகித கட்டுமானத்திற்கான நிதியை தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுத்துவிட்டாலும், நம்முடைய மக்களுக்கு அதற்கான நிதியை நம்முடைய சொந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், குடியிருப்பு என்பது மனிதன் வாழத் தேவையான ஓர் அடிப்படை உரிமை என்ற வகையில் நம்முடைய முதலமைச்சர் பெருந்தன்மையோடு அந்த நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பெயர் என்பதோ வேறு. வேறு பெயர்களை நீங்கள் வைத்துக்கொள்கிறீர்கள்; அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழ்நாடு அரசைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு அரசு மக்களுடைய நலனுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு பேர் வைப்பதிலே காட்டக்கூடிய ஆர்வத்தைப் பார்க்கிறபோது ‘நீங்கள் விளம்பர நோக்கத்திற்காக அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்’ என்பதை நான் சொல்லுவேன்.
எனவே எங்களைப் பொறுத்தமட்டில் மக்களுக்கான செயல் என்பதுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. புகழுக்காக அல்ல என்பதையும் நான் இங்கே திட்டவட்டடமாகச் சொல்வேன். அடுத்து, சமூக பொருளாதார அடிப்படையில் பார்த்தால், நம்முடைய அடிப்படையாகக் கீழே இருக்கக்கூடிய மக்களில் நாம் பார்க்கும்போது மாற்றுத் திறனாளிகள். அந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு வழங்கக்கூடிய நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 200 ரூபாய், அதைப்போல முதியோர் ஓய்வூதியத்திற்காக வழங்கக்கூடிய தொகை 200 ரூபாய், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கக்கூடிய தொகை எவ்வளவு தெரியுமா? 300 ரூபாய், முதியோருக்காக நீங்கள் கொடுக்கக்கூடியது 200 ரூபாய்; அதேபோல விதவைகள்-கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்களுக்கு 300 ரூபாய். இதை நீங்கள் வழங்குவது தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ். ஆனால், இந்தத் தொகையை வைத்துக்கொண்டு எப்படி ஒருவர் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். எனவேதான் நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய நிலையை உயர்த்த, இந்தத் தொகையை உயர்த்தி மாதம் இவர்களுக்கு 1,200 ரூபாய் என்று அவர்களுக்கு உயர்த்தித் தந்திருக்கிறார்கள்.
(மேசையைத் தட்டும் ஒலி) இதுதான் ஒரு மனிதநேயமிக்க அரசாங்கத்தினுடைய கருணையினுடைய வெளிப்பாடு எங்கே அமைந்திருக்கிறது என்று சொன்னால், எந்த இடத்தில் நம்முடைய கருணைப் பார்வை வரவேண்டும்; சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு அந்தக் கருணைப் பார்வை வர வேண்டும் என்கின்ற நோக்கில்தான் முதலமைச்சர் அவர்களுடைய கடைக்கண் பார்வையும் கருணை நோக்கோடு இன்றைக்கு அவர்களுக்கு கைதூக்கிவிட்டிருக்கிறது (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை நான் இங்கே உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதைப்போல ‘நிதிப் பகிர்விலே தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறது’ என்று நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். அதனுடைய நிதிப் பகிர்வு விகிதம், 7 சதவிகிதம் 15-வது நிதிக் குழுவினால்--ஏற்கெனவே 9-வது நிதிக் குழுவில் 7 சதவிகிதமாக இருந்தது; ஆனால், 15-வது நிதிக் குழுவில் 4.079 சதவிகிதமாக அது குறைத்து நிர்ணயிக்கப்பட்ருக்கிறது. இதனால் நம்முடைய மாநிலத்திற்கு வரக்கூடிய அந்த நிதிப் பகிர்வு நிராகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அளவிற்கு ஏறத்தாழ 2.63 இலட்சம் கோடி ரூபாய் நமக்கு வர வேண்டிய அந்தத் தொகை, நமக்கு வராமல் ஒரு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நான் நேற்றைக்குக்கூட அதைச் சொன்னேன். நம்முடைய ஒட்டுமொத்தமாக நிலுவையில் இருக்கக்கூடிய கடன் தொகையில் இது 32 சதவிகிதமாக இருக்கும். இந்தப் பங்கு நமக்கு வந்திருந்தால் நம்முடைய கடனுடைய அளவு பெருமளவு குறைந்திருக்கும் அல்லது கடனேகூட வாங்க வேண்டிய சூழ்நிலைகள்கூட இல்லாமல் இருந்திருக்கும்.
அதேபால, ஒட்டுமொத்த நாட்டினுடைய மக்கள் தொகையில் தமிழ்நாடு 6.124 சதவிகிதத்தைக் கொண்டிருக்கிறோம். ஆக, 6 சதவிகிதம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மாநிலம் வெறும் 4.0 சதவிகிதத்தை நாம் இன்றைக்கு நிதிப் பகிர்வாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மக்கள்தொகைக்கேற்ப இருக்கிறதா? இல்லை. அதைத்தான் சொன்னார்கள், ‘நீங்கள் developed ஆகிவிட்டீர்கள்; நாங்கள் கொடுக்கமாட்டோம்’ என்று சொல்வதற்கு அதுதான் காரணம். மக்கள்தொகைப் பெருக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தினோம். இந்த நாட்டினுடைய சிறப்பான திட்டங்களை முன்னெடுத்தோம். நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கக்கூடிய அந்தக் காலகட்டத்தில் எழுபதுகளில் ஒரு தொலைநோக்குப் பார்வையோடு மக்கள்தொகையைக் குறைக்க வேண்டுமென்கிற அந்தத் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையோடு நிறைவேற்றிய காரணத்தால் இன்றைக்கு தமிழ்நாடு நிதிப் பகிர்விலே வஞ்சிக்கப்படுகிறது. அதுமாத்திரமல்ல, இந்த நாட்டிலேயே மிகக் குறைவான நிதிப் பங்கீட்டைப் பெறக்கூடிய மாநிலங்களில் ஹரியானா, மகாராஷ்டிரத்திற்குப் பிறகு தமிழ்நாடுதான் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்று சொன்னால் மத்தியப் பிரதேசம் ஒருங்கிணைந்திருக்கிறபோது பெற்றிருக்கக்கூடிய வளர்ச்சி 48 சதவிகிதம்.
உத்தரப்பிரதேசம் 18 சதவிகிதம்; ஜார்க்கண்ட் எல்லாம் சேர்த்து பீகார் 15 சதவிகிதம்; கர்நாடகம் குறைவாக 18 சதவிகிதம்; ஆந்திரப் பிரதேசம் (-19) சதவிகிதம்; இவர்களுக்கெல்லாம் குறைவாகத்தான் வந்தது. ஆனால், தமிழ்நாட்டிற்கு எவ்வளவு குறைவு தெரியுமா? கொடுத்தது (-42) சதவிகிதம், தமிழ்நாட்டிற்குக் குறைந்திருக்கிறது. ஆக, இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால் கேரளாவும், நாமும் அதிலே ஒன்றாக இருக்கிறோம். மக்களுக்கான நலத் திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், அதற்காக நாம் வஞ்சிக்கப்பட்டு வந்திருப்பதற்கு இது நல்ல உதாரணம். நான் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்கிறேன். 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குக் கொடுத்திருக்கக்கூடிய வரிப் பங்களிப்பு எவ்வளவு தெரியுமா? 7.5 இலட்சம் கோடி ரூபாய். 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில். ஆனால், இந்த 7.5 இலட்சம் கோடி ரூபாய் நாம் கொடுத்துவிட்டு, நமக்கு எவ்வளவு வரிப் பகிர்வாக வந்திருக்கிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக 2.85 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக வந்திருக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசம் எவ்வளவு கொடுத்தார்கள்? கொடுத்தது வெறும் ரூ.3.07 இலட்சம் கோடி. ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுகூட வரவில்லை.
அந்த நிதி, இந்த சட்டமன்றத்திற்கு வெளியே இன்றைக்குப் பெருமழையாகப் பெய்வதைப்போல, உத்தரப் பிரதேசத்தில் நிதி பெருமழையாக வந்து, 3 மடங்கு தொகையாக, ஏறத்தாழ ரூ.10.60 இலட்சம் கோடி ரூபாயைப் பெற்றிருக்கிறார்கள். கொடுத்தது சுமார் 3 இலட்சம் கோடி. நம் ஊரில் சொல்வார்களே, எல்லோரும் சர சரவென்று போட்டு எடு, எடுத்ததில் எவ்வளவு ரூபாய் வருகிறதென்று பார்த்து அதிலே அடிக்கிறார்கள், gambling-ல்கூட இப்படி வரவில்லை. ஆனால், சுமார் 3 இலட்சம் கோடி ரூபாயைக் கொடுத்துவிட்டு, 10 இலட்சம் கோடி ரூபாயைப் பெறுகிறார்கள் என்று சொன்னால், இதுதான் இன்றைக்கு அப்பட்டமாக ஒன்றிய அரசு நமக்குச் செய்யக்கூடிய ஒரு மாபெரும் ஓரவஞ்சனை என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே, மிகுந்த பணிவன்போடு நான் சொல்வேன். தமிழ்நாட்டில் இத்தகைய நலத் திட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆட்சி நம்முடைய முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இருக்கிறது என்கின்ற காரணத்தால் (மேசையைத் தட்டும் ஒலி) எந்தக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், அடுக்கடுக்கான கஷ்டங்களை எங்களுக்குத் தந்து, நிதியினைக் குறைத்து, strangulate செய்து, இதையெல்லாம் செய்வதன்மூலமாக தமிழ்நாட்டு அரசினை ஸ்தம்பிக்க வைத்துவிடலாம் என்ற பகல் கனவிலே, நீங்கள் என்னதான் செய்தாலும், எவ்வளவுதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், நான் மிகுந்த பணிவன்போடு சொல்ல விரும்புவது என்னவென்றால், பாவேந்தருடைய வரிகளை எடுத்துக் கொண்டு நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத் தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப்போகும்! தூளாய்ப்போகும்! எத்தனை தடைகள் இருந்தாலும். (மேசையைத் தட்டும் ஒலி) தடைக்கற்கள் உண்டென்று சொன்னாலும் அவற்றைக் கடந்துவிடுவோம் என்று சொல்லி, அதிலே சிறப்பாக செயல்படக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் இந்த ஆட்சியின் சிறப்பை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்வார் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, என்னுடைய உரையின் இறுதியாக, மீண்டும் நான் ஒன்றிய அரசை நோக்கி, இறுதியாக ஒரு 10 கேள்விகளை வைக்க விரும்புகிறேன். தலைநகர் டெல்லியின் செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட புதிய சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களைப் பார்க்கும்போது, இதுநாள் வரை நாடெங்கும் உரத்த குரலிலே ஒலித்துக் கொண்டிருந்த Cooperative Federalism என்பது வெற்று முழக்கமா என்று ஒன்றிய அரசின் அதிகார பீடத்தில் இருக்கக்கூடியவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இது வெற்றுக்குரல் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? நாட்டிலேயே உயர் கல்வி சேர்க்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் அனைத்து வகைக் குறியீடுகளிலும் முதன்மை பெற்றுள்ள தமிழ்நாட்டின்மீது புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தித் திணிப்பை மீண்டும் கையில் எடுத்து, பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியையும், ஆசையையும், வாழ்வாதாரத்தையும் சிதைத்திடும் ஒன்றிய அரசின் செயல் என்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா? வாரா வாரம் நடைபெறும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை வழித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், தொடர்ந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைப் பார்த்தால், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கூற்றினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறதா? பரந்து விரிந்த இந்திய தேசத்தை ஒன்றிணைப்பதில் railway-ன் பங்கு மிக முக்கியமானது என்று வரலாற்றாசிரியர்கள்கூட கருதுகிறார்கள். ஆனால், புதிய இரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக railway-க்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து, கோவை மற்றும் மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய தமிழ்நாட்டு அரசினுடைய முன்மொழிவுகள் தலைநகர் டெல்லியில் கடந்த 20 மாதங்களாக நீண்ட உறக்கத்திலே உறைந்துபோய் இருக்கிறதே, அதற்கு காரணம் என்ன? நியாயம்தானா? அதே நேரம், உத்தரப் பிரதேச மாநிலத்தில், தலைநகர் லக்னோ மாநகரம் தவிர, ஆக்ரா, கான்பூர், நொய்டா ஆகிய மாநகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றவே? அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் Mumbai-ஐ அடுத்து, Pune, Nagpur மாநகரங்களிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறதே? உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இரண்டு மாநிலங்களை நான் சொல்கிறபோது, இயல்பாகவே உங்களுக்கு ஒரு கேள்வி எழும். உத்திரப் பிரதேசத்தைச் சொல்கிறார், மகாராஷ்டிராவைச் சொல்கிறார், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை ஏன் சொல்லவில்லையென்று. அந்த மாநிலம், இந்த மாநிலமாகத்தான் இருக்குமென்ற உங்களுடைய யூகத்தை நானும் யூகித்துக்கொள்கிறேன். எனவே, அந்த மாநிலம் சந்தேகத்திற்கிடமில்லாமல் குஜராத் மாநிலம்.
குஜராத் மாநிலத்தில் அதன் தலைநகர் அகமதாபாத் தவிர, சூரத் மாநகரத்தில் மெட்ரோ இரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தனை மாநிலங்களில், மாநிலத்தின் தலைநகரிலும், தலைநகரைத் தாண்டியுள்ள இடங்களிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கிறபோதுதான் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வி எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. கோவை மாநகரத்திற்குக் கேட்டோம். கோவை மாநகரம் என்பது தொழில்வளம் மிக்க ஒரு பகுதி என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த கோவை மாநகரத்தை நீங்கள் புறக்கணித்திருக்கிறீர்கள். சரி, கோவை மாநகரத்தைத்தான் புறக்கணித்திருக்கிறீர்கள். ஆனால், மதுரை என்பது “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று சொல்லக்கூடிய அன்னை மீனாட்சியை அருள்பாலிக்கக்கூடிய ஆன்மிகத் தலமாக இருக்கிறது. சங்கம் வளர்த்த மதுரை இறையனாரும் முருகவேளும் இருந்து சங்கம் வளர்த்திருக்கக்கூடிய அந்த மதுரை என்பது, ஆன்மிக திருத்தலமாக, அன்னை மீனாட்சியினுடைய அருள்பாலிக்கும் தலமாக இருக்கக்கூடிய அந்த இடமான மதுரைக்குக்கூட நீங்கள் மெட்ரோ இரயிலைத் தருவதற்கு மறுக்கிறீர்களே, நான் கேட்க விரும்புவது என்னவென்றால், உங்களோடு இன்றைக்கு இணக்கமாக கூட்டணியில் இருக்கிறாரே, மதுரையிலிருந்து அண்ணன் செல்லூர் கே.ராஜூ சினம்கொள்ள மாட்டார்களா? இதோ இருக்கிறாரே நம்முடைய ஆர்.பி. உதயகுமார் இதைக் கேட்டு, ஆர்.பி. உதயகுமார் அவர்களின் மனம் உடைந்துபோக மாட்டார்களா? அல்லது அங்கு இருக்கக்கூடிய—இன்று வரவில்லை, அண்ணன் வி.வி. ராஜன் செல்லப்பா .
ராஜன் செல்லப்பா அவர்களைப் பார்த்து மதுரை மக்கள், “செல்லப்பா அவர்களே, இதைக் கொஞ்சம் சொல்லப்பா” என்று அவரைப் பார்த்து யாரும் கேட்கமாட்டார்களா? ஆக, அவர்களுக்கெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், எங்களுக்காக இல்லையென்றாலும், உங்களோடு வந்திருக்கக்கூடிய, உங்களுடன் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கக்கூடிய மதுரை மாநகரத்திற்காகவாவது, உங்களுடைய கடைக்கண் பார்வை திரும்பி இருக்கிறது என்று சொன்னால், அது அங்கயற்கண்ணியினுடைய பார்வையே அதற்கு போதும், ஆளக்கூடியவர்களுடைய பார்வை தேவையில்லை என்ற முடிவிலே நீங்கள் இருக்கிறீர்களா என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அதேபோல, நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டப்படும் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதி 90 சதவிகிதம், ஒன்றிய அரசினுடைய பங்கு 10 சதவிகிதம் மட்டும். கிராமப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ஒன்றிய அரசின் பங்கு 30 சதவிகிதம் மட்டும். மீதம் தருவதெல்லாம் தமிழ்நாடு அரசுதான். இப்படி தமிழ்நாட்டின் நிதி மற்றும் தமிழர்களின் உழைப்பைப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளுக்கு பிரதம மந்திரி அவர்களுடைய பெயரை நீங்கள் வைத்துக்கொள்கிறீர்கள். பரவாயில்லை. பிரதம மந்திரி அவர்களுடைய பெயரை நீங்கள் வைத்துக்கொள்வதற்கு எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால், நாங்கள் கேட்பது என்னவென்றால், ஏன் அதற்கான உரிய நிதியை தமிழ்நாட்டிற்கு தர மறுக்கிறீர்கள்? 75 இலட்சம் கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கக்கூடிய வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ரூ.975 கோடியை இன்னும் தர மறுக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையின்மூலம் கிராமப்புற பொருளாதாரத்தையே சிதைப்பதுதான் உங்களுடைய நோக்கமா? தேசிய சமூக ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஓய்வூதியத்திற்காக ஒன்றிய அரசு வழங்கும் தொகை ரூ.200/- மட்டும். நான் குறிப்பிட்டு சொல்வது, விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுவது ரூ.300/- மட்டும். ஆனால், மக்கள் நலனைக் கருத்திலேகொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்குவது ரூ.1,200/- ஆகும். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் குடிசைகளில் வாழும் ஏழை குடும்பங்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படும் திட்டங்களுக்கு நிதியைக் குறைத்துவிட்டு, புரியாத மொழியில் மட்டும் நீட்டி முழக்கி பெயர் வைப்பதுதான் உங்களுக்கு வழக்கமா? நாடெங்கும் வாழும் மக்களுக்கு, தூய்மையான குடிநீரை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம் இன்று வறண்டு கிடக்கிறது.
தமிழ்நாட்டிற்கு வந்து சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி இன்னும் வரவில்லை. ஏழை மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டிய ஒன்றிய அரசு, அவர்களுக்கு தண்ணீருக்கு பதில் கண்ணீரை பரிசளிப்பது முறையாக இருக்குமா? நாட்டு மக்களின் மக்கள்தொகையில் 6.1 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து 10 சதவிகிதத்தை அளித்துக்கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு, ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 4 சதவிகித நிதியைப் பெறுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு உகந்ததா என்ற கேள்விகளை நான் இந்த பேரவையிலே வைக்கிறேன். இந்த கேள்விகளுக்கான விடையை ஒன்றிய அரசோ அல்லது அதை ஆளக்கூடிய கட்சியோ தராமல் போகலாம். ஆனால், நாட்டு மக்கள், வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைத் தேர்தலிலே நியாயத்தோடு வழங்குவதற்கு காத்திருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அந்த 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கக்கூடிய சட்டமன்றப் பேரவைத் தேர்தல் மட்டுமல்ல. அதற்கு பின்னால் எந்த தேர்தல் வந்தாலும், எப்போது தேர்தல் வந்தாலும் அதையெல்லாம் வென்று இந்த மாநிலத்தினுடைய மகுடபதியாக நம்முடைய முதலமைச்சர் இருப்பார்கள் என்பதை மட்டும் நான் இந்த நேரத்திலே தெரிவித்து, உறுப்பினர்கள் தாங்கள் தந்திருக்ககூடிய வெட்டுத் தீர்மானங்களை விலக்கி, அரசு கோரியிருக்கக்கூடிய மானியத் தொகையை வழங்கிட வேண்டும் என்று கேட்டு என் பதிலுரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.
Advertisement
Advertisement