திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் வீடுகளில் சோதனை பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு அபராதம்: உத்தரவு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விக்ரம் ரவீந்திரனின் வீடு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், விக்ரம் ரவீந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தின் ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு, மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், பதில் மனு அளிக்க அவகாசம் கோரினார். இதற்கு நீதிபதிகள்அதிருப்தி தெரிவித்தனர். இது சரியான நடவடிக்கை அல்ல என்றனர்.
அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ஒருங்கிணைந்த பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளதால் ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டுமென்று கோரினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு பதில் மனுவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 3 மனுக்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு அமலாக்கத்துறை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.