பண்டிகை காலங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு 20 % தள்ளுபடி: ரயில்வேயின் சூப்பர் ஆபர், முன்பதிவு ஆகஸ்ட் 14ம் தேதி தொடக்கம்
சென்னை: பண்டிகை காலங்களில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் சேர்த்து பயணச்சீட்டு முன்பதிவு செய்வோருக்கு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது என இரண்டு பயணத்தையும் முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு இந்த சலுகை உதவியாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக, ஒரே வகுப்பில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறது. உதாரணத்திற்கு, சென்னை - ,நெல்லைக்கு பயணத்தை திட்டமிடுவோர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு இரண்டாம் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்தால், ரிட்டர்ன் டிக்கெட்டும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு அதே இரண்டாம் வகுப்பில் பதிவு செய்ய வேண்டும். இப்படி ரவுண்ட் டிரிப் பேக்கேஜை பயன்படுத்துவோருக்கு மொத்த கட்டணத்தில் 20% சலுகை கிடைக்கும்.
இந்த சலுகை ஆர்ஏசி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு பொருந்தாது. உறுதி செய்யப்பட்ட பயணத்திற்கு மட்டுமே பொருந்தும். அதேபோல் இந்த சலுகையை பயன்படுத்தி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெற முடியாது. ஃப்ளெக்ஸி கட்டணம் கொண்ட ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்கள் உட்பட மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து ரயில்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் எந்தவொரு மாற்றத்திற்கும் அனுமதி இல்லை.
ஆன்லைன் அல்லது நேரில் சென்று முன்பதிவு செய்தாலும் இந்த தள்ளுபடி பொருந்தும். முன்பதிவு காலங்கள்: இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற ரயிலில் பயணிக்கும் தேதி அக்டோபர் 13 முதல் 26ம் தேதி வரையிலும், ரிட்டர்ன் பயணம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரையிலும் இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட 14 நாட்களுக்கு முன்கூட்டியே புறப்பாடு அல்லது ரிட்டர்ன் பயணத்தை தீர்மானித்தால் இந்த சலுகை பொருந்தாது. இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 1 4ம் தேதி தொடங்கவுள்ளது.