பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோ: எஸ்பி ஆபீஸ் உதவியாளர் கைது
ஊட்டி: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன்(45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அங்கு காவல்துறையினர் பயணப்படிக்கான வவுச்சர் ஒப்புதல் செய்து பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அண்மையில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தர கோரி நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இவரிடம் விண்ணப்பத்துடன் வவுச்சர் கொடுத்தார். அதில் தனது செல்போன் எண்ணையும் அவர் பதிவு செய்திருந்தார்.
அந்த எண்ணை குறித்துக் கொண்ட முருகன், பகல் மற்றும் இரவு நேரங்களில் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ் ஆப்பிற்கு குட் மார்னிங், குட் நைட் என தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் ஆய்வாளர் எந்த பதிலும் கொடுக்காமல் விட்டுவிட்டார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் ஆய்வாளரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை முருகன் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர், இதுகுறித்து ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஊட்டி ஊரக ரூரல் இன்ஸ்பெக்டர் கமலேஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.