கார்குடி வனத்தில் பெண் யானை உயிரிழப்பு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், ஊட்டி கோட்டத்திற்குட்பட்ட கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிராஸ்கட் கண்காணிப்பு கோபுரம் அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பான உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, துணை இயக்குநர் கணேசன், தன்னார்வலர்கள், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு உறுப்பினர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில் யானையின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் ஆய்விற்காக உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்காக காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.