கிராமப்புறப் பெண்களுக்கு பட்டுப்புழு வளர்ப்புப் பயிற்சி!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டல் என்ற தலைப்பில் இருபது நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழா ஓடந்துரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்புரை ஆற்றிய வனக்கல்லூரியின் முதன்மையர் நிகார் ரஞ்சன், பயிற்சியின் சிறப்பு மற்றும் பட்டுக்கூட்டினைக் கொண்டு பல்வேறு விதமான உயர் மதிப்புடைய கைவினை பொருட்கள் செய்வதின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். தலைமையுரை ஆற்றிய பட்டுபுழுவியல் துறைத் தலைவர் முருகேஷ் மல்பெரி சாகுபடி மற்றும் மல்பெரி பழத்தினைக் கொண்டு மதிப்பு கூட்டும் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கிக் கூறினார். வனக்கல்லூரியின் மூத்த பேராசிரியர் மற்றும் தலைவர் சேகர் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். இப்பயிற்சியில் படித்த வேலையில்லா கிராமப்புற பெண்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். விழாவில் வனக்கல்லூரியின் விஞ்ஞானிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
பயிற்சியில் மல்பெரி சாகுபடி, மல்பெரி பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, மல்பெரி தண்டு அறுவடை, பட்டுப்புழு வளர்ப்பு மனை நோய் நீக்கம், பட்டுப்புழு வளர்ப்பில் ஊசிஈ மேலாண்மை, மல்பெரி பழங்களிலிருந்து உயர் மதிப்பூட்டிய உணவுப் பொருட்கள் தயாரித்தல், எஞ்சிய பட்டுக்கூடுகளில் இருந்து பூங்கொத்து, திருமண மாலை, அணி கலன்கள் மற்றும் மலர்க்குவளைகள் உற்பத்தி செய்தல் குறித்த செயல்முறை விளக்கத்துடன் தொழில்நுட்ப உரைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பயனாளிகளின் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும் பொருட்டு கண்டுணர்வு சுற்றுலா மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மல்பெரி பழங்கள்!
நமது நாட்டில் பொதுவாக மல்பெரி செடிகள் பட்டுப்புழு வளர்ப்புக்காக சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் பழங்களுக்காக பல இடங்களில் பிரத்யே மல்பெரி செடிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் இருந்து கிடைக்கப்பெறும் மல்பெரி பழங்கள் பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. குறிப்பாக இதன் அதிக சர்க்கரை அளவு காரணமாக ஜாம், ஜெல்லிகள், ஸ்குவாஷ் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்பதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ரொட்டி, கேக்குகள், பழத்தூள், சாக்லேட், பைகள், பழ ஒயின் போன்றவற்றைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.