அதியமான்கோட்டை அருகே சாமந்தி பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்
நல்லம்பள்ளி : அதியமான்கோட்டை அருகே, விலை வீழ்ச்சியால் சாமந்தி பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான தொப்பூர், ஏலகிரி, எமக்ல்நத்தம், ஜருகு, மிட்டாரெட்டி அள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சாமந்திப்பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி பூ மார்க்கெட், சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி, ஓசூர் போன்ற ஊர்களுக்கு விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர்.
கடந்த வாரங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையால் ஒரு கிலோ சாமந்தி பூ ரூ.120க்கு மேல் விற்பனையானது. தற்போது விலை குறைந்துள்ள நிலையில், அறுவடை செய்துள்ள பூக்களை விற்பனைக்கு எடுத்து செல்லும் செலவிற்கு கூட ஆகாத நிலையில், சாலையோரம் பூக்களை விவசாயிகள் கொட்டி செல்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த வாரங்களில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையின் போது, சாமந்திப்பூ கிலோ ரூ.120 முதல் 160 வரை விற்பனையானது. தற்பொழுது கிலோ சாமந்தி ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. பறிப்புக்கூலி மற்றும் விற்பனைக்காக எடுத்து செல்லும் கூலி கூட கிடைக்காததால், சாலையோரத்தில் பூக்களை கொட்டி விட்டு செல்கிறோம்,’ என்றனர்.