அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் செம்பூண்டி ஊராட்சியில் ரூ.4.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் செம்பூண்டி ஊராட்சியில் ரூ.4.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், செம்பூண்டி ஊராட்சியில் செம்பூண்டி மடு உள்ளது. அந்த கிராமத்தின் அருகில் உள்ள கிளியாற்றில் மடுவாக பிரிந்து செம்பூண்டி கிராமம் வழியாக சென்று மீண்டும் அந்த கிராமத்தின் அருகில் கிளியாற்றில் கலக்கிறது. இந்த மடுவில் இருந்து செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் உள்ளது.
இந்த மடுவில் விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை மடைக்கட்டி தடுத்து அந்த கால்வாய் வழியாக தண்ணீரை செம்பூண்டி ஏரியில் நிரப்புவார்கள். அந்த மடுவில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விவசாயிகள் தற்காலிகமாக அமைக்கும் மடைகள் அடித்து சென்றுவிடும். செம்பூண்டி மடுவில் மடுவில் நிரந்தரமாக தடுப்பணை அமைத்து தண்ணீரை ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏவை விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்து செம்பூண்டி ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும், என கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சுந்தர் எம்எல்ஏ நீர்வளத்துறைக்கு பரிந்துரை செய்தார்.
அதனைத்தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில் செம்பூண்டி ஓடையில் தடுப்பணை கட்ட ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. 35 மீட்டர் அகலமும் 2.1 மீட்டர் உயரத்திலும் தடுப்பணை கட்டும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று தடுப்பணை கட்டும் பணிகள் நிறைவடைந்தது. மேலும், இந்த அணையில் இருந்து உபரி நீரானது செம்பூண்டி ஏரிக்கு சென்று அந்த ஏரியை நிரப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கால்வாயும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது இந்த பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணை நிரம்பியுள்ளது.
மேலும், அணையில் உள்ள உபரி நீரானது கால்வாய் வழியாக ஏரிக்கு சென்றதால் அந்த கிராமத்தின் ஏரியும் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நீர் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் ஏரியில் உள்ளதால் விவசாயிகள் பலரும் உழவுப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ள பாதிப்புகள் தடுப்பு
செம்பூண்டி கிராமத்தில் உள்ள மடுவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்த கிராமத்தில் ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓடையில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் மழைநீர் வெள்ள பாதிப்புகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தடுப்பணை
செம்பூண்டி கிராம மக்களும், விவசாயிகளும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தடுப்பணை அமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால், தற்பொழுது திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
செம்பூண்டி கிராமத்தில் உள்ள மடுவில் தடுப்பணை கட்டப்பட்டதால் உபரிநீர் கால்வாய் வழியாக சென்று ஏரியில் நிரம்பியுள்ளது. தடுப்பணையும் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, விவசாய பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு காரணமாக கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடின்றி செழித்தோங்கும் சூழல் உருவாகியுள்ளது.