குடும்ப அட்டையில் குறைதீர் முகாம் நாளை நடக்கிறது: கலெக்டர் தகவல்
திருவள்ளூர்: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பாக நவம்பர் மாதத்திற்கான குறைதீர் முகாம் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நாளை நடக்கிறது. எனவே பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலை கடைகளில் வரும் 25ம் தேதி க்குள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.