தனது குடும்பத்துடனான உறவை துண்டிக்கும்படி கணவருக்கு அழுத்தம் கொடுப்பது சித்ரவதையே: டெல்லி ஐகோர்ட் கருத்து
டெல்லி: தனது குடும்பத்துடனான உறவை துண்டிக்கும்படி கணவருக்கு அழுத்தம் கொடுப்பது சித்ரவதையே என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனைவி, கணவரின் விதவை தாய் மற்றும் விவாகரத்து பெற்ற சகோதரி ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த உறவை முறித்து கொள்ள வேண்டும். தாங்கள் தனியாக செல்ல வேண்டும். அதே போல் குடும்ப சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் மனைவி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளார்.
ஆனால் அதனை மறுதலித்து வந்த கணவருக்கு எதிராக பல்வேறு புகார்களை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். கணவருக்கு எதிராகவும், கணவரின் சகோதரி மற்றும் தாய்க்கு எதிராகவும் பல்வேறு புகார்களை அளித்தார். அதே போல், கணவரின் அலுவலகத்தில் இருக்கும் நண்பர்கள் இருக்கக்கூடிய சந்திப்பில் பொது இடங்களில் அவரை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத கணவர் ஒரு கட்டத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தனக்கும் தன் கணவருக்கும் வழங்கப்பட்ட விவாகரத்தை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனைவி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அணில் ஷேத்ரபால், ஹரிஷ் வைத்யநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனது குடும்பத்தினருடன் உறவை முறித்து கொள்ள நிர்பந்திப்பது ஒரு விதமான துன்புறுத்தல், அதே போல் பொது இடத்தில் தன்னுடைய அலுவலகசகாக்கள் மத்தியில் அவரை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதும் ஒரு விதமான துன்புறுத்தல் தான். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எதிராகவும் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்களை கொடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்து நிர்பந்தித்தது எல்லா துன்புறுத்தலுக்கும் பெரிய துன்புறுத்தல் என நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்து அந்த மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குடும்பநல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது.