"5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்".. தவறான விளம்பரங்கள் செய்ததற்காக Rapido-க்கு ரூ.10 லட்சம் அபராதம்..!!
சென்னை: ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வசதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் 50 ரூபாய்க்கு ஆசை காட்டி வாடிக்கையாளர்களிடம் மோசம் செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்" மற்றும் "Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.50 பணமானது, ரொக்கமாக வழங்கப்படாமல், ரேபிடோ நாணயங்களாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள், பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. ஏழு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் அவற்றின் மதிப்பை கட்டுப்படுத்தும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நியாயமற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் அதே சேவையை பயன்படுத்தும்படி நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தகைய விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளது என்று கூறி ரூ.10 லட்சம் அபராதம் விதித்த ஆணையம், அந்த தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று CCPA உத்தரவிட்டுள்ளது.