பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண் சித்ரவதை: கணவன், மாமனார், மந்திரவாதி கைது
திருவனந்தபுரம்: பேய் விரட்டுவதாக கூறி இளம்பெண்ணை 10 மணி நேரத்திற்கு மேல் அறையில் பூட்டிப்போட்டு உடலில் சூடு வைத்தும், மது, பீடி குடிக்க வைத்து அடித்தும் கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கணவன், மாமனார் மற்றும் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (58). இவரது மகன் அகில் (26). கூலித்தொழிலாளியான அகிலுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இவரது மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி கணவன் வீட்டினர் அப்பகுதியை சேர்ந்த சிவதாஸ் என்ற மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். இளம்பெண்ணின் உடலில் கெட்ட ஆத்மாக்கள் புகுந்துள்ளதாகவும், அதை விரட்டுவதற்கு வீட்டில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் மந்திரவாதி கூறியுள்ளார்.இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் அகிலின் வீட்டில் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அப்போது அந்த இளம்பெண்ணை 10 மணி நேரத்திற்கு மேல் அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேலும் மது, பீடி குடிக்க வைத்தும், உடலில் சூடு போட்டும், அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் திருவஞ்சூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தாஸ், அகில் மற்றும் மந்திரவாதி சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அகிலின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.