நெருக்கடியான சூழலில் டெல்லிக்கு ஓடிய சேலத்துக்காரர் வாழ்த்து சொல்லிட்டு சிரிப்புடன் வந்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மாமனாருக்கு ஆதரவாக செயல்படும் மருமகனால் யூனியன் பிரதேச அரசியலில் சலசலப்பு ஏற்பட்டிருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நாடு முழுவதும் மலராத கட்சி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தென் மாநிலங்களை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறதாம்.. ஏற்கனவே தமிழகத்தை ஒட்டியுள்ள யூனியனில் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துவிட்ட நிலையில் வரும் தேர்தலில் முழுமையான அதிகாரத்தை பிடிக்க முடிவெடுத்து களப்பணிகளை இப்போதே தொடங்கி விட்டதாம்..
மலராத கட்சியின் தன்னிச்சையான சில நடவடிக்கைகள் கூட்டணியின் தலைவரான புல்லட்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாம்.. அதிலும் குறிப்பாக மாநில நிர்வாகி மற்றும் உயர் அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு இல்லாதது தொடர்பாக வெளிப்படையாகவே புல்லட்சாமி புலம்பி வருகிறாராம்.. இது கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் மலராத கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்காம்..
அதாவது தாமரை இலை தண்ணீர்போல் ஒட்டாமல் இரு கட்சிகளும் இருப்பதை சிவாயமானவரும் ஒப்புக்கொள்ள, நமது வெற்றிக்கு ஒற்றுமையான பயணம் தேவை என மாமனாருக்கு ஆதரவாக வலியுறுத்தி வருகிறாராம்.. இதுபற்றிதான் யூனியன் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பக்குவமில்லா காவலர்களால் களங்கமான மேல்மட்டங்கள் ஆடிப்போய் இருக்குதாமே..’’ என்றார் பீட்டர்
‘‘குறிச்சி மாவட்டத்தின் மலை பகுதியில் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய போலீஸ் ஒருவரே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி இருக்காரு.. கடந்த 15 ஆண்டுக்கு முன் குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் வரை காவல் நிலையத்தில் வேலை பார்த்தவர்களைத்தான் தனிப்பிரிவு, உளவுப்பிரிவுக்கு நியமனம் செய்தார்கள். ஆனால், இப்ப நிலைமை தலைகீழாக மாறிடுச்சாம்.. ஆயுதப்படையில் கற்று பணிக்கு வரும்போதே சிலர் அதிகாரிகளை பிடித்து நேரடியாக இங்கு வந்து விடுகிறார்களாம்..
குறைந்த வயதில் ராஜாவுக்கு கிரீடம் வச்சதுபோல நினைப்பு வர இளசுகளின் செல்போன் நம்பர்களை வாங்கி சில அத்துமீறல்களில் துணிச்சலாக ஈடுபடுகிறார்களாம்.. இவை வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறிட தனிப்பிரிவு என்றாலே ஒழுக்கம், நற்பெயர் என்பது களங்கமாகி வருகிறதாம்.. தற்போது மலையில் சிக்கிவரும் உயர் அதிகாரியை ஏமாற்றி கடந்த ஒரு வருடமாகவே மகாபிரபுவாக உலா வந்துள்ள விஷயம் தெரியவர, தலைமையிடம் டோஸ் வாங்கி மாவட்டத்தின் மேல்மட்டங்களும் களங்கமாகி ஆடிப்போய் இருக்கிறதாம்..
இனியாவது இதுபோன்ற பணிகளுக்கு அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டுமென்ற கோஷம் உள்ளூர் காக்கிகள் வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எலக்ஷன்ல சீட்டு யாருக்கு.. மாவட்ட நிர்வாகி பவர் எடுபடுமா, மாநில நிர்வாகி பவர் எடுபடுமா என இப்போதே போட்டி ஆரம்பிச்சுடுச்சாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டு அரசியல்ல பெருசாக தெரிஞ்ச இலை, இப்ப மலரால் விழுங்கிடும் நிலை ஏற்பட தொடங்கியிருக்குதுன்னு அரசியல் வட்டாரத்துல பரபரப்பாக பேசிக்கிறாங்க..
அதற்கு ஏற்றபடி, மலர் பார்ட்டிகள் எந்த தொகுதியை வாங்கலாம்னு இப்பவே கணக்கு போட்டு வர்றாங்க.. இந்த கணக்கு இப்ப கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி தொகுதியில நடந்து வருதாம்.. அதாவது மலர் பார்ட்டிகளுக்குள்ளாகவே யாருக்கு சீட்டுன்னு பஞ்சாயத்து ஆரம்பிச்சுட்டாங்களாம்.. வெயிலூரை சேர்ந்த மாநில நிர்வாகியான கார்த்திகை பெண்மணி, அதே மாவட்டத்துல இருந்த 2 எழுத்து இனிஷியல் தொகுதி மேல ஒரு கண்ணு வெச்சிருந்த நிலையில, இப்ப இன்னொரு கல்லையும் அடிச்சிருக்குறதாக சொல்றாங்க.. அந்த கல்லு கிரிவலம் பக்கம் போயிருக்குறதாக சொல்றாங்க..
அதாவது கிரிவலத்துல வந்தா வாசி தொகுதிக்கு கல் போயிருக்குதாம்.. ஆனா மலர் பார்ட்டியோட டிஸ்டரிக் செக்ரட்ரி, அதே ஏரியாவை சேர்ந்த இன்னொருத்தருக்கு சீட் கிடைச்சா நல்லா இருக்கும்னு பீல் பண்றாராம்.. இதனால மாவட்ட நிர்வாகி பவர் எடுபடுமா, மாநில நிர்வாகி பவர் எடுபடுமான்னு போட்டி நடக்குதாம்.. இவங்க கணக்கு இப்படி இருக்க, இலை பார்ட்டியில, கூட்டணிக்கே இந்த தொகுதிய ஒதுக்கிட்டு செய்ஆறு தொகுதியில சீட்டு வாங்கிடலாம்னு அந்த ஏரியா இலை பார்ட்டி டிஸ்ட்ரிக் செக்ரட்ரி தனி கணக்கு போட்டு வர்றாராம்..
இதனால தொகுதியில இருக்குற இலை பார்ட்டிகள் விரக்தியில இருக்காங்களாம்.. தேர்தல் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே இப்படி இருந்தா வௌங்கிடும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெல்லிக்கு போய் வாழ்த்து சொன்ன இலைக்கட்சி தலைவர் ரொம்பவே மகிழ்ச்சியுடன் திரும்பினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்தவுடன் இலைக்கட்சி தலைவரு ரொம்பவே ஜோராக இருந்தாராம்..
மேலும் இலைக்கட்சியில் தனக்கு எந்தநேரத்தில் யாரால் தொந்தரவு வரும் என்பதை தெரிந்து கொண்டு, அவர்களை கட்சியில் இருந்தே தூக்கி எறிந்திட்டாராம்.. இதனால தேனி, குக்கர், சின்ன மம்மி ஆகியோர் இலைக்கட்சியில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியலையாம்.. எந்த பதவியும் வேண்டாம் கட்சியில் சேர்த்துக்கோங்கன்னு தேனிக்காரர் மன்றாடியும் பலன் இல்லாமல் போனதாம்..
இவர்களைப்போல இருக்கும் உதிரிக்கட்சிகளை மலராத கட்சி கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தந்திரத்தையும் இலைக்கட்சி தலைவர் கையாண்டாராம்... இதனை தெரிந்து கொண்ட குக்கர்காரர், இலைக்கட்சி தலைவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூடாதுன்னு போர்க்கொடி தூக்கிட்டாராம்.. இப்படி பார்த்தால் இலைக்கட்சியுடன் கூட்டணி என்று யாருமே இல்லாத நிலை இருக்குதாம்.. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலைக்கட்சி தலைவர் டெல்லிக்கு ஓடியிருக்காரு..
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் மலராத கட்சி தமிழ்நாட்டில் கரையேற முடியாதுன்னு டெல்லி தலைமைக்கு உறுதியாக உணர்த்தியவர் புதிய துணை ஜனாதிபதிதானாம்.. இவருக்கு தனது சக நிர்வாகிகளுடன் சென்று வாழ்த்து சொல்லியிருக்காரு.. அவரும் கொங்குநாட்டு சைவ பிரியாணி, கொங்கு பருப்பு சாதம், ரொமாலி ரொட்டி என 15 வகையான உணவு வகைகளை போட்டு அசத்திட்டாராம்.. அதன்பிறகு தன்னுடன் வந்தவர்களை ஓரமாக இருக்க வைத்துவிட்டு ஒரு முக்கால் மணிநேரம் இலைக்கட்சி தலைவர் தனியாக பேசினாராம்..
அதில் கோபிக்காரரை சந்தித்து பேசக்கூடாது, அவருக்கு ஆதரவாக இருந்தால், கூட்டணியை மறுபரிசீலனை செய்வேன் என்பதையும், இலைக்கட்சியில் இருந்து பிரிந்துபோனவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்து செயல்படட்டும், அவர்களை மலராத கட்சி கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சொல்லுங்கள் என்பது போன்ற கோரிக்கையை முன்வச்சதாக சொல்றாங்க.. அதோடு மாஜி போலீஸ்காரரின் நடவடிக்கை கூட்டணியை உடைப்பது போல இருப்பதாகவும் கூறினாராம்..
ஆனால் அந்த மாஜி போலீஸ்காரர் சொல்வதெல்லாம் பொய் என மேலிடத்தில் சொல்லி நம்ப வைத்ததும் புதிய துணை ஜனாதிபதிதானாம்.. எனவே அவரைப்பற்றி எந்த கவலையும் வேண்டாம், இனி அவருக்கு எந்த பொறுப்பும் எப்போதும் வழங்க வாய்ப்பே இல்லை என இலைக்கட்சி தலைவருக்கு உறுதி அளித்தாராம்.. இதனால ரொம்பவே மகிழ்ச்சி அடைந்த இலைக்கட்சி தலைவர் அவருக்கே உரித்தான சிரிப்பை சிரித்துக்கொண்டு வெளியே வந்தாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.