ரூ.12,301 கோடியில் 133 கிலோ மீட்டர் தூரம் அமைகிறது எண்ணூர் துறைமுகம்-பூஞ்சேரி இடையே 6 வழிச்சாலை பணிகள் விறுவிறு
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், சிங்கப்பெருமாள் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சென்னை - எண்ணூர் துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்களால் சென்னையில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள், வேலைக்கு செல்லக்கூடியவர்கள், நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
மேலும், சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையால், சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே, நெரிசலை குறைக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டம் என்ற பெயரில் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த பணி, பிரிவு ஒன்றின்படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு இரண்டின்படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் மதுரவாசல், கன்னிகைப்பேர் பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. இதுபோல், 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 2025 ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.