இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான `தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 ஆயிரத்து 819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதலமைச்சருடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
இங்கிலாந்தில் கால் பதித்தேன். தொலைதூரக் கரைகளைக் கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்ததோர் வரவேற்பினால் அன்புடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன். இவ்வாறு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்த்திட..: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்துக்கு துணை நிற்கும் ஐரோப்பிய பயணம். தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்த பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன் என கூறியுள்ளார்.
- இங்கிலாந்தில்கால் பதித்தேன்.
- தொலைதூரக் கரைகளைக் கடந்து சென்றும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்ததோர் வரவேற்பினால் அன்புடனும், பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்.