தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் பல கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டு வருகிறது: கனிமொழி எம்பி பேச்சு
சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக 75 அறிவுத்திருவிழாவில் நேற்று நடந்த கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு கணைகள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்முனை தாக்குதல் நடைபெறுகிறது. நமது பாரம்பரிய எதிரிகளும், பரம்பரை எதிரிகளும், எல்லாருக்கும் எதிரியாக ஒரே கட்சி என்றால், அது திமுக தான்.
அவர்களுக்கு வழிவிடாமல், கருத்தியலாக இருக்கட்டும், அரசியல் வழியாக இருக்கட்டும், அறத்தின் பால் நின்று அவர்களை எதிர்க்கக்கூடியவர்கள், நாம் மட்டும்தான் என்று அவர்களுக்கு தெரியும். அதனால்தான், எல்லாவிதத்திலும் நம்மை நோக்கிதான் கணைகளை அவர்கள் எய்து கொண்டு இருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் என்ன செய்தது என்றால், மொழியை, யாரோ தங்களுடைய தமிழாக மாற்றி வைத்திருந்தார்களோ, யார் இலக்கியத்தை, மேடையை, திரை உலகத்தை தங்களுடையதாக மாற்றி வெகு ஜனங்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய செய்திகளைக் கூட தனக்குதான், தான் சொல்லக்கூடிய விஷயங்களை மட்டும் தான் சொல்ல முடியும் என்று மாற்றி வைத்திருந்தார்களோ, அதை உடைத்தது திராவிட இயக்கம். இவ்வாறு அவர் பேசினார்.