கூவிக் கூவி அழைக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையை விஜய் ஏற்பது தற்கொலைக்குச் சமம்: டிடிவி.தினகரன் காட்டம்
திருப்புத்தூர்:சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மருது சகோதரர்களின் 224ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், அளித்த பேட்டி:அரசியலில் அனுபவத்தை தாண்டி மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். எடப்பாடி பழனிசாமியும் அவரை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் பரிதாப நிலையில் உள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று அதிமுகவாக இல்லை. எடப்பாடி திமுகவாக மாறிய பிறகு, அவர்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்தும் ஒவ்வொரு இடங்களிலும், எங்களோடு வாங்க வாங்க என்று கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி கூப்பிடுவதைப் பார்த்து உண்மையாகவே தமிழக மக்கள் நகைக்கிறார்கள்.
அதிமுக உறுதியாக இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என தெரிந்ததால், தனது தலைமையிலான கூட்டணியை விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எடப்பாடி எண்ணுகிறார். டிசம்பர், ஜனவரியில் கூட்டணிகள் உறுதிபடும். மருது சகோதரர்கள் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள். எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்தவர்களின் காலில் விழுந்து பதவி பெற்று காலை வாறியவர். உறுதியாக சொல்கிறேன் எடப்பாடியின் துரோகத்திற்கு அவர் இந்த தேர்தலில் வீழ்த்தப்படுவார். கூவி கூவி அழைக்கும் கல்லாப்பெட்டி பழனிசாமியை தோளில் தூக்கி வைத்துக் கொள்ள விஜய் வருவாரா? அதிமுக - தவெக கூட்டணி அமைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எடப்பாடி தலைமையை விஜய் ஏற்று கொண்டால் அது தற்கொலைக்கு சமம். துரோகத்தைத் தவிர பழனிசாமிக்கு எதுவும் தெரியாது. தொண்டர்களை உற்சாகப்படுத்த பழனிசாமி ஏதோ கூறி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்யுடன் கூட்டணி கிடையாது;‘அமமுக இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக அமையும். அரசியலில் அனுபவத்தை தாண்டி மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று தான் சொன்னேனே தவிர, விஜய்யோடு கூட்டணிக்கு செல்வோம் என்று கூறவில்லை’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவுக்கு 15 சதவீத வாக்குகளே கிடைக்கும்;புதுக்கோட்டையில் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தான் போட்டி போடும். விஜய்க்கு அரசியல் ஆலோசனை கூறும் அளவிற்கு அவருடன் அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இல்லை. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்கும் வரை தேஜ கூட்டணியில் நாங்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை. எடப்பாடி தலைமையில் உள்ள அதிமுகவிற்கு 15 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும். நாங்கள் அமைக்கும் கூட்டணியில் ஓபிஎஸ் வருவாரா என்பது குறித்து ஜனவரி மாதம் தான் தெரியவரும். 2026 தேர்தலில் யாரும் எதிர்பாராதது போன்று புதிய கூட்டணி ஒன்று அமையும். இவ்வாறு அவர் கூறினார்.