எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்: அதிமுக அறிவிப்பு
சென்னை: எடப்பாடி சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி 5.10.2025 வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 29ம் தேதி(இன்று), 30ம் தேதி(நாளை) மற்றும் 4ம் தேதி ஆகிய தேதிகளில் தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே வரும் 2, 3ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் நடைபெறும்.
2ம் தேதி தர்மபுரி மாவட்டம் தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டமன்ற தொகுதியிலும், 3ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளிலும், 6ம் தேதி நாமக்கல் மாவட்டம் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் நடக்கிறது. ஏற்கெனவே வரும் 5ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும்.