துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த எடப்பாடிக்கு தகுதியில்லை: டிடிவி தினகரன் கடும் தாக்கு
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவதே தங்களின் ஒரே நோக்கம் என்றும், அவருடன் ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியை கடுமையாகச் சாடினார். பழனிசாமியின் துரோகத்திற்கு எதிராகவே அமமுக தொடங்கப்பட்டது என்று கூறிய அவர், ‘துரோகம் என்ற வார்த்தையை பழனிசாமி பயன்படுத்த தகுதி இல்லை. நாங்கள் ஒருபோதும் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிக்க மாட்டோம், அதனை நாங்கள் விரும்பவும் இல்லை’ என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். கூட்டணிக் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சில கட்சிகள் தங்களை கூட்டணிக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்றும் அவர் மறுத்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், ‘எங்களது கூட்டணி குறித்த இறுதி முடிவு வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் எடுக்கப்படும். அமமுகவை தவிர்த்துவிட்டு எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலைதான் தற்போது உள்ளது’ என்று குறிப்பிட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருவதாகவும், உரிய நேரத்தில் அதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார். கடந்தகால நிகழ்வுகளை நினைவுகூர்ந்த டிடிவி தினகரன், ‘சிலர் எங்களைக் கேட்டுக்கொண்டதால் தான், கடந்த முறை கூட்டணி குறித்து பேசச் சொன்னேன். ஆனால், அது உறுதியாக நடக்காது என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், பழனிசாமி எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார், அதனால் அவர் என்னைச் சந்திக்கத் தயக்கம் காட்டுகிறார்’ என்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், துரோகம் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தேர்தலைச் சந்தித்தோம் என்றும், அந்த நோக்கம் நிறைவேறியதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் தேர்தலிலும் துரோகத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதே தங்களின் முதல் இலக்கு என அவர் கூறினார். எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம் தற்போது இல்லை என்றும், தற்போது இருப்பது ‘எடப்பாடி திமுக’ தான் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். ‘பணபலம், இரட்டை இலை சின்னம் மற்றும் கூட்டணி பலம் இருந்தும் அவர்களால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் அதனை உணர்வார்கள். எங்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் நாங்கள் வீட்டிற்குச் சென்றுவிடுவோம் என்று நினைக்கிறார்களா? தொண்டர்களும், மக்களும் எங்கள் பின்னால் இருக்கிறார்கள்’ என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.