தலைமை பொறுப்புக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
சென்னை: தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிசாமிக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம் அளித்தேன். தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி.
தன்னை விமர்சித்தவர்களை கூட கட்சியில் சேர்த்து அரவணைத்தார் ஜெயலலிதா. ஆர்.எம்.வீரப்பன், பா.வளர்மதி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியவர்கள்தான். பழனிசாமியின் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர் எடப்பாடி என்ற துரோக சக்தி 2026 தேர்தலில் வீழ்த்தப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகளை தமிழகத்தில் தொடரலாம். எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளில் எனக்கே குழப்பம் வருகிறது.
சாமானிய மக்களுக்கு எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும் என்று கூறினார். கூட்டணிக்கு தவெக அழைத்ததா என்ற கேள்விக்கு அதெல்லாம் சொல்ல முடியாது என பதில் அளித்தார்.
கூட்டணிக்காக அமமுகவுடன் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்று கூறினார்.