அமித்ஷா-பன்னீர் சந்திப்பு எதிரொலி; எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி: மூத்த தலைவர்களும் காலை வாருவார்களோ என கலக்கம்
சென்னை: அமித்ஷாவை பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லி சென்று சந்தித்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற பீதி அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த தலைவர்களிடம் கூட பேசாமல் இரு நாட்களாக அமைதி காத்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். சசிகலா பொதுச் செயலாளரானார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும், பன்னீர் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டவர், தன்னை இணை ஒருங்கிணைப்பாளராகவும், பன்னீரை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்துக் கொண்டார். பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கட்சி தன்னை விட்டு போகக் கூடாது என்பதற்காக பன்னீரை கட்சியில் இருந்து விரட்டினார். தன்னை, பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்தார். அப்போது முதல் பொதுச் செயலாளராக உள்ளார்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர், தொடர்ந்து அதிமுகவில் சேர முயன்று வருகிறார். அதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், அதிமுக, பாஜக கூட்டணி பிரிந்து, மீண்டும் ஒன்றிணைந்தது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்ப்பு காரணமாக, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது பன்னீர், டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் இருவரும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டனர். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பன்னீர் அணியுடன் இணைந்து செயல்பட்டவர், திடீரென தவெகவில் இணைந்து விட்டார்.
இந்தநிலையில் வருகிற 15ம் தேதி முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக பன்னீர் அறிவித்தார். இந்தநிலையில் மயிலாப்பூர் ஆடிட்டர் உதவியுடன் திடீரென்று ரகசியமாக திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்றார் பன்னீர். அங்கு அமித்ஷா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது தங்களை அதிமுகவில் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் என்டிஏ கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதற்கும் முடியாவிட்டால், தனிக்கட்சி தொடங்கி தவெகவுடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க மறுத்து வருவதால், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதியவரை நியமிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வருகிறார். இதை அமித்ஷா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. டெல்லி சென்ற தகவல் வெளியில் தெரிந்து விட்டதால், நேற்று மாலை சென்னை திரும்பிய பன்னீர், அமித்ஷாவை சந்தித்ததை ஒப்புக் கொண்டார். அரசியல் பேசியதாக கூறினார்.
இந்தநிலையில் தன்னுடைய எதிர்ப்பை மீறி அமித்ஷா, பன்னீரை சந்தித்து திரும்பியுள்ளதும், இது குறித்து எந்த தகவலையும் இதுவரை அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசாமல் இருப்பதும் எடப்பாடிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில தலைவர்கள் துணையுடன் தன்னை வீழ்த்திவிட்டு புதிய அணி அமைக்க அமித்ஷா திட்டமிட்டிருக்கலாம் என்றும் எடப்பாடி சந்தேகப்படுகிறார். இதனால் கடந்த இரு நாட்களாக மன உளைச்சலில் உள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர். மூத்த தலைவர்களுடனும் அவர் பேசாமல் இருக்கிறாராம். இதனால் அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வரும்போது அதிமுக கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.