நோயாளியை ஏற்றவே சென்றேன்: எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு
வேலூர்: அணைக்கட்டு பகுதியில் அவசர ஊர்தியை அனுப்பி பரப்புரைக்கு இடையூறு என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை கண்டு அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, நான் ஒவ்வொரு முறை கூட்டத்தில் பங்கேற்கும்போது வேண்டுமென்றே இதேபோன்று ஆளில்லாத ஆம்புலன்ஸை கூட்டத்திற்குள் விட்டு கலாட்டா செய்கின்றனர். இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாக போகிற நிலைமை வரும் என்று பேசினார். இந்நிலையில் அணைக்கட்டு பகுதியில் அவசர ஊர்தியை அனுப்பி பரப்புரைக்கு இடையூறு என்ற எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அணைக்கட்டு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை ஏற்றச் சென்றேன். பரப்புரைக் கூட்டம் முடிந்திருக்கும் என்பதால் எளிதில் செல்லக் கூடிய வழி என சென்றதாகவும் ஓட்டுநர் விளக்கம் அளித்தார். அணைக்கட்டு மருத்துவமனையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சென்றதாகவும் ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார்.