எடப்பாடியை விமர்சனம் செய்த பதிவால் மோதல் தவெக நிர்வாகியை தாக்கிய அதிமுக கவுன்சிலர் மீது வழக்கு
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர்நகர் 1ம் தெருவை சேர்ந்தவர் சங்கரமகாலிங்கம் (23). தவெக மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர். போட்டோகிராபராக வேலை செய்கிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் அதிமுக 8வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவர் கடந்த 22ம் தேதி முகநூல் பக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். பதிலுக்கு சங்கரமகாலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி சங்கரமகாலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ ஆர்டர் கொடுக்க அழைப்பதாக கூறியுள்ளார். இதை நம்பி அங்கு சென்ற சங்கரமகாலிங்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் சரவணக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.