தன்னைக் காத்துக் கொள்ளவே பாஜவுடன் எடப்பாடி கூட்டணி: அமைச்சர் நேரு பேட்டி
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் துறையூர் சுற்றுப்பயணத்தின்போது ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அரசு நிகழ்ச்சியாக இருந்தால் கூட முதல்வர் உரையாற்றினாலும் கூட ஆம்புலன்ஸ் வந்தால் உடனடியாக கூட்டம் அப்புறப்படுத்தப்பட்டு வழிவிட்டு வருவது திமுக அரசு. திமுக அரசு தான் வேண்டுமென்றே ஆம்புலன்சை கூட்டத்துக்குள் அனுப்புகிறது என எடப்பாடி விமர்சிப்பதில் உண்மை தன்மை இல்லை. வரும் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பை அளிப்பார்கள். பஞ்சப்பூரில் எனக்கு 300 ஏக்கர் இடம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவ்வாறு எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பஞ்சப்பூரில் இடம் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகமே எடுத்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமியும் எடுத்து கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை தற்காத்து கொள்வதற்காக தான் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். எனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக முதல்வர் குடும்பத்துடன் இணக்கமாக இருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது எனக்கு நற்சான்றிதழ் அளிப்பது போலத்தான். தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் நடந்து வருகிறேன். இவ்வாறு கூறினார்.