‘நானும் ரவுடிதான்’ என்பது போல என்னை ஏன் விமர்சிக்கவில்லை என்று வான்டடாக வண்டியில் ஏறும் எடப்பாடி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை. ‘நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு பார்ம் ஆயிட்டேன்ய்யா’ என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்ற போதும் ‘நானும் ரவுடிதான்’ என்பது போல ’நானும் எதிர்க் கட்சித் தலைவர்தான்’ என்று வான்டட் ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலினத்தவர்களின் வாக்குரிமையை பீகாரில் பறித்தது போல், தமிழ்நாட்டிலும் பறித்துவிடலாம் எனப் போட்ட சதியை எதிர்த்து களப்போரட்டமும், சட்டப் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
ஆட்சியில் இருக்கும் போது டெல்லி பிக்பாஸ்களுக்குப் பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தது போல இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை அடகு வைக்கத் துணிந்துவிட்ட பழனிசாமி எஸ்ஐஆர்க்கு வக்காலத்து வாங்குவது ஆச்சரியமில்லை. முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை ஆதரித்து விட்டு முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனப் பச்சைப் பொய் சொன்னவர்தான் பழனிசாமி. அந்த சிஏஏ சட்டத்தை எஸ்ஐஆர் வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜவுக்கு துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட ’திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி’ என்று பேசுவதால் பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது போல. முதல்வரை பார்த்து, பாஜவை விமர்சிக்காமல் எங்களையும் கொஞ்சம் விமர்சியுங்கள் என்று கெஞ்சுகிறார்.
பணமதிப்பிழப்பு தொடங்கி தற்போது எஸ்ஐஆர் வரை அனைத்திலும் அப்பாவி மக்களை அல்லல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி அதைக் கண்டு ஆனந்தப்படும் பாஜவையும் அதன் அடிமைகளையும் என்றும் தமிழ்நாடு ஏற்காது. எஸ்ஐஆர்க்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாத பழனிசாமி பாஜவிற்காக முட்டுக்கொடுக்க மட்டும் ஓடோடி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.