பொருளாதாரத்திற்கான நோபல் விருது: மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோக்கிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்கப் பரிசின் ஒரு பாதியை ஜோயல் மொகிர் (நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம்) பெற்றார்.தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான முன்நிபந்தனைகளை இவர் கண்டறிந்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகள் ஒரு சுய-உற்பத்தி செயல்முறையாக வெற்றிபெற, ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்குப் பின்னால் உள்ள அறிவியல் விளக்கங்கள் அவசியம் என்பதை மொகிர் நிரூபித்தார். பிலிப் அகியான் (காலேஜ் டி பிரான்ஸ்) மற்றும் பீட்டர் ஹோவிட் (பிரவுன் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு ஆக்கபூர்வமான அழிவு மூலம் நீடித்த வளர்ச்சிக் கோட்பாட்டிற்காகக் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.