தைலாபுரத்தில் ராமதாசுடன் ஈஸ்வரன் திடீர் சந்திப்பு
திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாசை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் நேற்று திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் திடீரென சந்தித்து பேசினர். சுமார் அரைமணி நேர சந்திப்பிற்குபின் ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமதாஸ் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பார்க்க வாய்ப்பு இல்லாமல் போனது.
தற்போது அவரது உடல் நலம் விசாரிப்பதற்காக வந்தோம். அவர் ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ வாழ்த்து தெரிவித்தோம். பாமக ஒருங்கிணைந்து வலிமையான சக்தியாக இருக்க வேண்டுமென்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென நாங்கள் மனதார விரும்புகின்றோம். திமுக கூட்டணிக்கு பாமக வருவது குறித்து பேசக்கூடியது திமுக தலைவரும், ராமதாசும்தான். கூட்டணி பேசுகிற அதிகாரம் எங்களுக்கு கிடையாது.
ஜனவரி மாதத்தில்தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடக்கும். கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை விஜய் நேரடியாக சந்தித்திருக்க வேண்டும். அன்றைய தினமோ அல்லது ஒரு சில நாட்களிலோ அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக் கூடியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.