மின்னணு கழிவுகளை நிர்வகிப்பதில் சிறப்பு கவனம்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு
சென்னை: மின்னணு கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பதில் கல்லூரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் நிலுவையில் உள்ள கோப்புகளை முறையாக முடிக்கவும், பொது சேவை வழங்கல் மற்றும் அலுவலக தூய்மையை மேம்படுத்தவும் சிறப்பு பிரசாரம் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்தது.
அதன்படி சிறப்பு பிரசாரம் 5.0 திட்டத்தின்கீழ் உயர்கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய விவகாரங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி தற்போது சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், சிறப்பு பிரசாரம் 5.0 திட்டத்தின்கீழ் செப்டம்பர் 15 முதல் 30ம் தேதி வரை ஆயத்த நிலையாகவும், அக்டோபர் 2 முதல் 31ம் தேதி வரை செயல்படுத்தும் நிலையாகவும் நிர்ணயித்து பணிகளை மேற்கொள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, தேவையற்ற கழிவுகளை அகற்றுவது உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு அந்த பணிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு மின்னணு கழிவுகளை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பது எப்படி என்பதிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.