துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானி உடல் சூலூர் கொண்டுவரப்பட்டு அஞ்சலி
சூலூர்: துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானியின் உடல் இன்று கோவை சூலூர் விமானப்படைத்தளம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி பின்னர் விமானியின் சொந்த ஊரான இமாச்சல் பிரதேஷ்க்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது கோவை சூலூர் விமானப்படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து தீயில் எரிந்தது. இந்த விமானத்தை இயக்கிய இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உயிரிழந்தார். இந்நிலையில் விமானியின் மனைவி சூலூர் விமானப் படைத்தளத்தில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சூலூர் விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில வசித்து வந்தனர்.
இந்நிலையில் வீர மரணம் அடைந்த விமானி நமன்ஸ் சியால் உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் சூலூர் விமானப் படைத்தளத்திற்கு தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு அவர் அணிந்திருந்த தொப்பி வைக்கப்பட்டது. பின்னர் விமான நமன்ஸஸ் சியால் உடலுக்கு கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அஞ்சலி மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் விமானியின் உடல் அதே விமானத்தில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மனைவியுயும் விமானத்தில் சென்றார்.