துபாயிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளுடன் கடத்திய ரூ.4 கோடி சிகரெட் பறிமுதல்
தூத்துக்குடி: துபாய் ஜபல் அலி துறைமுகத்திலிருந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது. அதில் ஒரு கன்டெய்னரில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ‘வெட் டேட்ஸ்’ எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவை போலி என்று தெரியவந்தது.
உடனடியாக அந்த கன்டெய்னரை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் பாதி பேரீச்சம்பழம் பாக்கெட்கள் இருந்தன. அதற்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டிருந்தது. அதில், வெளிநாட்டை சேர்ந்த பிரபல நிறுவனத்தின் சிகரெட்கள் என்ற போர்வையில் 1,300 பெட்டிகளில் இருந்த 2 லட்சம் சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இந்த சிகரெட்டுகள் யாருக்காக கடத்தி வரப்பட்டன?, அதனை இறக்குமதி செய்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சிகரெட்கள் அனைத்தும் இந்தியாவில் தயாராகும் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயார் செய்யப்பட்டு, துபாயில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
* ஏலம் மூலம் விற்பனை
துபாயில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட பேரீச்சம்பழங்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏலம் மூலம் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை சுங்கத்துறையில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.