போதைப்பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடிகர் ஸ்ரீகாந்த் 11ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சென்னை: போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 28 ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29ம் தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
அந்த சம்மனை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கடந்த 29ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார். அவரிடம் போதை பொருள் வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டது. மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் உரிய ஆவணங்களுடன் விசாரணை நடத்தப்பட்டது. 11 மணி நேரம் நடந்த விசாரணையில் வழக்கு தொடர்பான வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் போதை பொருள் யார் மூலம் வாங்கியது, யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பான அனைத்து பதிலையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நடிகர் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 28ம் தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2 வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் அன்றைய தினம் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தினால் தான், எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்ற முழுமையான விபரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.