போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
சென்னை: போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்கிட தீவிரமாகப் பாடுபடுகிறர்கள். வேறு மாநிலங்களிலிருந்து போதைப் பொருள்கள் தமிழ்நாட்டிற்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசின் காவல்துறை மூலம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே போதையின் பாதை வேண்டாம் என காணொலி மூலம் இளைஞர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்கள்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 11.8.2025 அன்று நந்தனம் ஆடவர் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் "போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன். காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் பெருமக்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., உள். மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.பசென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., உட்பட காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு தொடர்பாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரை ஒன்று போதைப் பொருள் நடமாட்டத்தை மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு
போதைப்பொருள் வர்த்தகத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் போதைப்பொருள் நுகர்வு இந்தியாவில் மிகக் குறைவாக இருந்தாலும், பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டிற்குள் கடத்தப்படுகின்ற போதைப் பொருள்கள் இடைமறிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன. 2022 முதல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
புள்ளி விவரங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தமிழ்நாட்டைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலரால் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை வலுவாக முறியடிக்கின்றன. ஒன்றிய அரசின் ஆய்வின்படி, தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு வெறும் 0.1 சதவீதம், ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம், மயக்க மருந்துகள் 0.3 சதவீதம், இன்ஹேலன்ட்ஸ் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.
இதனால், போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டை விடச் சிறிய மாநிலமான அசாமில், சில பிரிவுகளில் போதைப் பொருள் நுகர்வு விகிதம் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் குறைந்த நுகர்வு நிலைகள், மக்களின் விழிப்புணர்வையும், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசின் கண்காணிப்பையும் பிரதிபலிக்கின்றன.
மே 2021 முதல், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் ஹெராயின், மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன்,மெத்தா குவாலோன் போன்ற போதை மருந்துகளும், கஞ்சா சாக்லேட் போன்ற மாறுவேடத்தில் இருந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்குள் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் இல்லை என்ற நிலையில் இது சாத்தியமாகியுள்ளது.
2022இல் நடத்தப்பட்ட சோதனைகளில், 28,383 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது 2020ஐ விட 61 சதவீதம் அதிகம், 2021ஐ விட 33 சதவீதம் அதிகம். இந்தப் போதைப் பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இதை உணர்ந்து, தமிழ்நாடு ஆந்திராவுடன் இணைந்து, அங்கு 6,416 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.4,000 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழிக்கக் கோரி நடவடிக்கை எடுத்தது. மாநிலங்களுக்கு இடையிலான இத்தகைய ஒத்துழைப்பு, தமிழ்நாட்டின் போதைப் பொருள் ஒழிப்பு கொள்கையின் தீவிரத்தையும். அதன் பரந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
போதைப் பொருள் ஒழிப்புப் போரில் ஒரு முன்னணி மாநிலம் குற்றவாளிகள் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் தமிழ்நாட்டின் விழிப்புணர்வு தெரிகிறது. 2021 முதல் மார்ச் 2025 வரை, தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 3,307 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒடிசாவைச் சேர்ந்த 892 பேர், கேரளாவைச் சேர்ந்த 662 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 447 பேர், பீகாரைச் சேர்ந்த 386 பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 322 பேர் ஆகியோர் அடங்குவர். இது போதைப் பொருள் ஒழிப்புப் போரில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக இருப்பதைக் காட்டுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.