பாடாலூர் அருகே புளியமரத்தில் டிப்பர் லாரி மோதி டிரைவர் பலி!
பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தில் கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே டிரைவர் பலியானார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா இவரது மகன் மணிகண்டன் (32). டிரைவர் இவர். இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் திருவளக்குறிச்சியில் இருந்து ஜல்லி ஏற்றுவதற்காக தேசிய நெடுஞ்சாலை நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார். அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் சம்பவ இடத்தில் உடல் நசுக்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.