மருத்துவமனைக்கு வராமல் சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்கள் பணி நீக்கம்: கேரள சுகாதாரத்துறை அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் பணிக்கு வராத ஊழியர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு முன்னதாக இயக்குநரகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. தொடர்ந்து மருத்துவ ஊழியர்களுக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும் , அவர்கள் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இதனால், மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி கேரள சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது குறித்து,
கேரளா சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
“மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 டாக்டர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக பல கட்டங்களாக அந்த டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு முறையான பதில் தரவில்லை. மேலும், மருத்துவப்பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும் மாநிலம் முழுவதும் அரசின் மருத்துவக்கல்வி துறையில் பணி செய்து வந்த 51 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.