தேமுதிகவினர் மீதான மாற்று கட்சியினர் தாக்குதலுக்கு பிரேமலதா கண்டனம்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தேமுதிக அலுவலகம் திறப்பதற்காக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் சென்று திறந்த போது மாற்றுக் கட்சியினர் அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து அங்கிருந்த நிர்வாகிகளை கத்தி, அரிவாள், இரும்பு கம்பி போன்றவை மூலம் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த கலவரம் காவல் நிலையத்திற்கு எதிரே நடந்துள்ளது. காவல் துறையினர் அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று காவல்துறையினரை அழைத்த பின்பு கலவரத்தை தடுத்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்க கூடிய ஒரு செயல். தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக யாராக இருந்தாலும் காவல் துறை கைது செய்யவேண்டும். இல்லையெனில் தேமுதிக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.