தீபாவளி பலகாரம் தரம் குறைந்தால் ரூ.10 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை: தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை
சென்னை: தீபாவளி பண்டிகை காலத்தில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறைகளை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு விதிகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் பலகார விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் தரத்தில் சிதைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கருதி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது. இது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 மற்றும் 63ன் கீழ் ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாக கருதப்படுகிறது.
இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:
* பால் மற்றும் பால் சாரா இனிப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட வேண்டும்.
* தரமான எண்ணெய் மற்றும் நெய் மட்டுமே உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்பட வேண்டும்.
* அனைத்து உணவுப் பொருட்களும் மூடிய நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
* பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* பரிசு பெட்டகம் (கிப்ட் பாக்ஸ்) உள்ள உணவு பொருட்களுக்கு சரியான லேபிள்கள் ஒட்டப்பட வேண்டும்.
பணியாளர்களுக்கான நெறிமுறைகள்:
* உணவை கையாளும் பணியாளர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
* வெற்றிலை, புகை, எச்சில் உமிழ்தல் போன்ற செயல்கள் உணவு தயாரிப்பு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
* பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்து இருக்க வேண்டும்.
* அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, பயிற்சி பெற்ற பொறுப்பாளர் ஒருவர் பதிலளிக்க வேண்டும்.
* மீறுபவர்கள் மீது பொதுமக்கள் வாட்ஸ் அப் எண் 94440 42322 மூலமாகவும், TNFSD Consumer App மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்.
தீபாவளி காலத்தில் மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைகள் முக்கியமானவை. அனைத்து வியாபாரிகளும் விதிகளை பின்பற்றி, தரமான,பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.