தீபாவளி சீட்டு மோசடி பெண் போலீஸ் கைது: உடனடி சஸ்பெண்ட்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(42). இவர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் பழைய தங்க நகைகள் வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். தீபாவளி சீட் பண்ட் திட்டம் என்ற பெயரில் கடலூர் புதுக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்துள்ளார்.
இதில் முதிர்வு அடைந்த 66 பேருக்கு ரூ.7.92 லட்சம், ஹேமா என்பவர் மூலம் பணம் கட்டிய 162 பேருக்கு ரூ.19.44 லட்சம், ரெட்டிச்சாவடி பூசாரிப்பாளையம் வனிதா என்பவர் மூலம் பணம் கட்டிய 42 பேருக்கு ரூ.1.80 லட்சம், வனிதாவிடம் கடனாக பெற்ற ரூ.4 லட்சம் போன்றவற்றை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு கடையை மூடிவிட்டு தலைமறைவானார்.
இவருக்கு உடந்தையாக அவரது மனைவி ஆயுதப்படை காவலர் கோமளாவும் பணத்தை ஏமாற்றியதாக அனிதா என்பவர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பிரபுவை கடந்த ஏப்ரல் 14ம் தேதி கைது செய்தனர்.இந்நிலையில் பிரபுவின் மனைவி கோமளா(39) நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை உடனடி சஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.